ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்... அதிமுக, அமமுகவினர் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமமுக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கும் நடைமுறையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
கட்சிப்பாடல்
தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை அதிமுகவினரும், அமமுகவினரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பட்டிதொட்டியெங்கும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவின் கொள்கைப்பாடல்கள் மற்றும் எம்.ஜி.ஆர். பட பாடல்களை ஒலிக்கவிடப்பட்டன. மாவட்டம் தோறும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் தலைவியின் பிறந்தநாளை உணர்ச்சிபொங்க கொண்டாடினர் அதிமுக நிர்வாகிகள். அவர்களுக்கு சற்றும் சளைக்காத வகையில் அமமுகவினரும் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தினர்.
தலைமைச் செயலகம்
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா பிறந்தநாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் அதற்கான விழா இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுவதோடு, அன்றைய தினம் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மனிதச்சங்கிலி, கருத்தரங்கள், தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசின் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
மரக்கன்று
ஜெயலலிதாவின் 72 வயதை குறிப்பிடும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், அரசு வளாகங்கள், கண்மாய் கரைகள் என பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஜெயலலிதா பிறந்தநாளன்று மரக்கன்றுகள் நடும் பணி அவர் உயிருடன் இருந்த காலத்தில் இருந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு மலர்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 72 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகள் முன்னிலையில் கேக்கை வெட்டினர். அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் புகழ்பாடும் சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த மலரில் ஜெயலலிதாவின் பொன்மொழிகள், சாதனைகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.