தொகுதிப் பங்கீடு... அதிமுக பாஜக இடையே... இரண்டாம் நாளாக தொடரும் பேச்சுவார்த்தை
சென்னை: சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் மே 2 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வேட்பு மனுத் தாக்கல் வரும் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கூட்டணியை உறுதி செய்யும் பணிகளில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி தொடர்பாகக் கிண்டி நட்சத்திர ஹோட்டலில் நேற்றிரவு உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக நிர்வாகிகள் 2வது நாளாக இன்றும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. அதிமுக சார்பில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றர்.
அதேபோல பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றர். அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே இன்னும் சில நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.