காலா ஓட்டு... கழகத்துக்கே... !! ரஜினியின் ஆதரவு தமக்கு தான் என்று அறிவித்த அதிமுக
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் லோக்சபா தேர்தலுக்கு எங்களுக்குத்தான் ஆதரவு அளிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று அதிமுக தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவில் அதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, ரசிகர்களின் முன்னிலையில், நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தார்.புத்தாண்டு செய்தியாக அதை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
ஆனால்... லோக்சபா தேர்தலில் நிற்கப்போவதில்லை. சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் நிற்கப் போகிறேன் என்று அப்போது கூறினார். இருப்பினும்... அதை அரைமனதோடு ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
அறிக்கைகள், விமர்சனங்கள்
அதன் பின்னர் பாஜக குறித்தும், அவ்வப்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப (குறிப்பாக... 7 தமிழர் பிரச்னையில் ஏற்பட்ட சர்ச்சை) அறிக்கைகளும், விளக்கங்களையும் அறிக்கை வாயிலாக தெரிவித்து வந்தார். சில அறிக்கைகள், பாஜகவுக்கு ஆதரவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
ரஜினி அறிவிப்பு
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தன்னுடைய ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார் ரஜினி. இதையடுத்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் ரஜினி.
ஆதரவு கிடையாது
வரும் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை. எனது பெயரை, கட்சிக் கொடியை, புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தார்.
வாக்களியுங்கள்
தமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான திட்டங்களை யார் வகுத்து செயல்படுவார்கள் என நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த ஒத்த பாரா செய்தியை வைத்துக் கொண்டு அதிமுக... தமது கட்சிக்கு தான் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறது.
நமது அம்மா நாளிதழ்
நமது அம்மா நாளிதழில் சித்ரகுப்தன் என்ற பெயரில் மிக நீண்ட கவிதை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்து தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாய் தீர்த்து வைப்பதற்கு யார் திட்டங்கள் வகுத்து உறுதியாக அதை செயல்படுத்துவாரென நம்புவீர்களோ அவர்களுக்கு வாக்களிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தொடங்குகிறது.
நதிநீர் இணைப்பு திட்டங்கள்
காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்தது, வீணாக கடலில் கலக்கும் கோதாவரி நதி நீர் திட்டம் கூடவே காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தையும் தமிழக அரசு மேற்கொள்கிறது. அதற்கு தாமரை அரசே உதவிட தயாராக இருப்பதோடு, திட்டச் செலவுகளில் 90 சதவிகிதத்தை மத்திய அரசே மனதார ஏற்பதற்கு தயார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
அகராதி தேவையில்லை
அதை குறிப்பிட்டுதான் உச்ச நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதனை புரிந்து கொள்ள ஆக்ஸ்போர்டு அகராதி தேவையில்லை என்று அந்த கவிதையில் கூறப்பட்டிருக்கிறது.
அரசியல் கட்சிகளின் கணக்கு
ஒரு அறிக்கை வெளியிட்டு லோக்சபா தேர்தல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார். ஆனால்... அந்த அறிக்கையின் உள் அர்த்தங்கள் இது தான்... எங்களுக்கு தான் ஆதரவு என்று அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொள்வதை என்னவென்று சொல்ல...!