அந்த பணத்தை உங்க பாக்கெட்டிலிருந்து கொடுக்கணும்.. திமுகவை குத்திக் காட்டும் அதிமுக
சென்னை: நீலகிரி மாவட்டத்தை கடந்த வாரம் பெய்த அதிகன மழை பிய்த்துப் பிடுங்கி விட்டது. ஊட்டி அருகே அவலாஞ்சி காடும், கூடலூர் சட்டமன்ற தொகுதியும் சின்னாபின்னமாகி கிடக்கின்றன.
இந்த நிலையில் தமிழக முதல்வர் இ.பி.எஸ். இன்னும் அங்கே மக்களை சந்திக்கப் போகவேயில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரே நாள் தலையை காட்டிவிட்டு திரும்பிவிட்டார். ஆனால் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினோ முதல் ஆளாக அங்கு சென்று, இரண்டு நாட்கள் இருந்து மக்களுக்கு ஆறுதலும், நிவாரணமும் வழங்கினார்.
அதுமட்டுமில்லாமல் 'தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்கள் ஐவரும் ஆளுக்கு தலா ஒரு கோடி தருவார்கள். நீலகிரியின் லோக்சபா எம்.பி. ராசா மூன்று கோடி தருவார். கூடலூரின் தி.மு.க. எம்.எல்.ஏ. திராவிட மணி ரெண்டு கோடி தருவார். ஆக மொத்தமாக தி.மு.க. சார்பில் பத்து கோடி ரூபாய் நிவாரணமாக தரப்படும்.' என்று அறிவித்தார். இது நீலகிரி மக்கள் மனதில் செம்ம குஷியை கிளப்பியது. ஏதோ மகராசன் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட முடிஞ்சதை செய்றாரே! எனும் எண்ணம்தான்.
திருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி!
அதிர்ச்சியில் அதிமுக
ஆனால் அ.தி.மு.க.வோ ஸ்டாலினின் இந்த தடாலடி அறிவிப்பினால் அரண்டு போய்விட்டது. ஆளும் நமக்கு முன்பே அங்கு போய் நல்ல பெயர் வாங்கிக் கொண்டது மட்டுமில்லாமல், பத்து கோடி ரூபாய் வேறு தருவதாக அறிவித்து மக்களை கவர்ந்துவிட்டாரே! என்பதுதான் அது. கடுப்பான அ.தி.மு.க.வினர் ஆலோசனையில் இறங்கி, சில முடிவுகளை எடுத்தனர்.
வேலுச்சாமி தாக்கு
அதன் படி அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரும், மாஜி அமைச்சருமான செ.ம.வேலுசாமி "இந்த விஷயத்தில் அரசியல் லாபம் தேடியிருக்கிறார் ஸ்டாலின். அதாவது ஒவ்வொரு எம்.பி.க்கும் அத்தியாவசியத் தேவைக்க்கு என்று சிறப்பு நிதி ஒதுக்குவாங்க. அதை வெச்சு அந்த எம்.பி. இது மாதிரி இயற்கைப் பேரிடர்களுக்கு செலவு செய்யலாம். இது அவங்களாக செய்ய வேண்டியது.
அடுத்து மழை பெய்தால்
ஆனால் ஸ்டாலின் பத்து கோடி நிதி உதவியாக கொடுப்பதா அறிவித்தால் அதை தனது சொந்த நிதியிலிருந்துதான் தந்திருக்க வேண்டும். இப்படி தன் ஐந்து மாநிலங்களவை எம்.பி.க்களையும் தலா ஒரு கோடியை கொடுன்னு நீலகிரிக்காக இவர் ஆர்டர் போட்டிருக்கார். அவங்களும் கொடுத்துதான் ஆகணும். இப்படி தனக்கான நிதியில் பெரும் பகுதியை ஒரு பகுதிக்கே செலவு செய்துவிட்டால், இனி அடுத்து பருவமழை பெய்து பல பகுதிகள் சேதமாகும் போது அங்கேயெல்லாம் பிரித்துக் கொடுக்க என்ன செய்வார்கள்?
சொந்தக் காசை கொடுக்கலாமே
சில பகுதிகளுக்கு செல்ல வேண்டியை நிதியை தடுத்து, ஒரு புறம் மட்டுமே அனுப்புவது ஜனநாயக விரோதம். மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் கட்சியில் செயல்படும் டிரஸ்ட்டுகள் மூலமாக கொடுத்திருக்கலாமே ஸ்டாலின்! அல்லது தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்திருக்கணும்! அல்லது தனது கழகத்தின் பெரும் கோடீஸ்வர நிர்வாகிகளிடமிருந்து வாங்கி கொடுத்திருக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு இப்படி பண்றது சரியில்லையே! அனுபவம் மிக்க தலைவரா நீங்க ஸ்டாலின்?" என்று பறாண்டி எடுத்திருக்கிறார்.
டிகேஎஸ் இளங்கோவன்
இதில் டென்ஷனான தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.யான டி.கே.எஸ். இளங்கோவனோ "எங்களைப் போன்ற எம்.பி.க்களுக்கு வருடத்துக்கு ஐந்து கோடி ரூபாய் தொகுதி நிதி கொடுக்கிறார்கள். அதிலிருந்து ஒரு கோடியை நீலகிரிக்கு கொடுக்கப்போகிறோம். இதில் என்ன பெரிய பிழையை கண்டுவிட்டது அ.தி.மு.க.? டெல்லி புண்ணியத்தில் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் சொந்த மாநில மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நீலகிரிக்கு ஓடோடிச் சென்று மக்களை பார்த்து ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.
சிதைந்து போகப் போகுது
அதை செய்யாத நிலையில் , மழை வெள்ளமென்றும் பாராமல் களமிறங்கிய எங்கள் தலைவரையா குறை பேசுகிறார்கள். இந்த இழி செயலை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தல் வெள்ளம் வரும்போது இந்த அ.தி.மு.க. அடித்துச் சென்று சுவடே இல்லாமல் சிதைந்து போகத்தான் போகிறது." என்று முழங்கியிருக்கிறார்.
- ஜி.தாமிரா