அதிமுக தலைமையகத்தில் அதிவேகமாக நடந்த நேர்காணல்...!
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் அதிவேகமான முறையில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் நேற்று மாலை நேர்காணல் நடத்தப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., மற்றும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த நேர்காணலில் மொத்தம் 90 பேர் கலந்துகொண்டனர். விக்கிரவாண்டியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 36 பேரும், நாங்குநேரியில் போட்டியிட விருப்பம் கோரி 54 பேரும் நேர்காணலில் கலந்துகொண்டனர்.
நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் என்ன தொழில் செய்கிறீர்கள், எத்தனை வருடமாக கட்சியில் இருக்கிறீர்கள், மற்றும் எல்லா நேர்காணல்களிலும் கேட்கப்படும் கட்டாய கேள்வியான எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது தான் கேட்கப்பட்டது. சிலர் தன்னிடம் செலவழிக்க பணம் இல்லை கட்சி தான் பார்த்துக்கொள்ள வேண்டும், இத்தனை ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்திருக்கிறேன் என உருக்கமாகவும், சிலர் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் நேர்காணலில் கூறியுள்ளனர்.
ஒரு நபருக்கு நான்கிலிருந்து 5 நிமிடம் வரை எடுத்துக்கொள்ளப்பட்டு மின்னல் வேகத்தில் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே வேட்பாளர்களை கூட அதிமுக தலைமை முடிவு செய்துவிட்டதாகவும், நாளை(புதன்கிழமை) வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.