அமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக
Recommended Video
சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகையையொட்டி ஒட்டுமொத்த அமைச்சர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளதால் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டியில் அதிமுகவின் தேர்தல் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11-ம் தேதி சென்னை வரவுள்ளதால் தமிழக அரசு சார்பில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் அனைவரும் சென்னையிலேயே தங்கி ஆய்வு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்ட பின்னரே அமைச்சர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவின் இலக்கு. இதற்காக, அமைச்சர்களுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டிய இடங்கள் பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களும் தொகுதிகளில் தங்கி நிர்வாகிகளை வேலை வாங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் முதல் அமைச்சர்கள் இரண்டும் தொகுதிகளிலும் இல்லை. எல்லோரும் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் நாம் பேசிய போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுவது சர்வதேச அளவிலான முக்கியமான சந்திப்பு. இந்த நேரத்தில் அந்தச்சந்திப்புக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனால் அமைச்சர்கள் இங்கு தங்கி அதற்கான பணிகளை கவனித்து வருகின்றனர்.
வரும் 13-ம் தேதிக்கு பிறகு இரண்டு தொகுதிகளிலும் அமைச்சர்கள் அதிதீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள், எங்கள் தேர்தல் பணியில் எந்த சுணக்கமும் இல்லை. அமைச்சர்கள் அங்கு இல்லாததால் உங்களுக்கு அப்படி தெரிகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர்கள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி திமுக வாக்குகளை வளைக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.