அரசுக் கட்டிடத்தில் கட்சிக் கூட்டம்... மதுரையில் புதிய சர்ச்சை
சென்னை: மதுரையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் முழுக்க முழுக்க கட்சி தொடர்புடையது என்பதாலும், தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்பதாலும் அரசு கட்டிடத்தில் அதை எப்படி நடத்தலாம் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுரை அழகர்கோவில் சாலையில் அரசு சுற்றுலா மாளிகை(சர்க்யூட் ஹவுஸ்) உள்ளது. அங்கு முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.அதிகாரிகள் உள்ளிட்டோர் மட்டும் தான் தங்க முடியும்.
ஆனால் சமீபகாலமாக அமைச்சர்கள் பெயரைக் கூறி அதிமுகவினர் அரசு சுற்றுலா மாளிகையை ஆக்கிரமித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நாங்குநேரி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அந்த மாளிகையில் நடந்துள்ளது. திட்ட ஆய்வு உள்ளிட்ட அரசுப் பணிகளுக்காக பயன்படுத்த வேண்டிய அரசுக் கட்டிடத்தை, அதிமுக கட்டிடமாக நினைத்து கூட்டம் நடத்தியுள்ளதாக திமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்தக் கட்சியினர் இங்கு கூட்டங்களே நடத்தியது இல்லையா என, எதிர்க்கேள்வி எழுப்புகிறார் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நிர்வாகி.