செம உருக்கம்.. "கரை" வேட்டிகளைக் கடந்த கண்ணீர்.. "ரெண்டு பேரும் இல்லையே".. சமாதியில் ஒரு விசும்பல்!
ஜெயலலிதா, கருணாநிதிக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்
சென்னை: நேற்று ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சென்னை மெரினா பீச்சில் நடந்துள்ளது.. தொண்டர்களின் அந்த உணர்ச்சிபிழம்பை கண்டு தமிழக மக்களே ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
Recommended Video
மறைந்த ஜெயலலிதாவுக்கு நேற்று கடற்கரையில், நினைவு மண்டபம் திறக்கப்பட்டது.. விழா சிறப்பாக நடந்து முடிந்தது.. எடப்பாடியார் ஜெயலலிதாவுக்காக செய்த இந்த அசத்தலான காரியத்தை கண்டு, அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் மலைத்து போய் உள்ளனர்..!
இந்த நிகழ்ச்சிக்காவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் பஸ்ஸை பிடித்தும், வேன்களை பிடித்தும் பீச்சுக்கு வந்து சேர்ந்தார்கள்.. செல்லூர் ராஜு ரயிலே விட்டு விட்டார்.
நினைவிடம்
ஜெயலலிதா நினைவிடத்தில் உருகி உருகி கண்ணீர் வடித்தபடியே நின்றனர்.. பிறகு, கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கலைஞர் கருணாநிதியின் சமாதியில் நின்று அஞ்சலி செலுத்த ஆரம்பித்துவிட்டனர்... அவர்கள் எல்லாருமே அதிமுக தொண்டர்கள்தான்.. கைகளை குவித்து கண்களில் நீர் மல்க அவர்கள் நின்று கொண்டிருந்த கோலம் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டது.
ஆச்சரியம்
இதுவரை தமிழக வரலாற்றில், ஒரு கட்சி தொண்டன், இன்னொரு கட்சி தலைவரை ஏற்றுக் கொண்டதே இல்லை.. ஆதரித்ததும் இல்லை.. அவ்வளவு ஏன்? சொந்த கட்சி தலைவருக்காகவே தங்கள் இன்னுயிரையும் மாய்த்து கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.. இது விசுவாசத்தின் உச்சக்கட்டம் என்றும் சொல்லலாம்.
விசேஷங்கள்
அதேபோலதான், ஒரு தலைவர், இன்னொரு தலைவரை புகழ்வதும், அவர்களது குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் அரிதான விஷயம்.. அப்படி ஒரு ஆரோக்கியமான அரசியல் எம்ஜிஆர் - கலைஞருடன் முடிந்துவிட்டது.. அதற்கு பிறகு அதாவது ஜெயலலிதா முதல்வரான பிறகு, மாற்று கட்சி தலைவர்களின் வீட்டு விசேஷங்கள் முதல் எதிலுமே அவ்வளவாக கலந்து கொண்டதில்லை..
அவஸ்தை
ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதாலும், அவரை மனம் குளிர வைக்க வேண்டும் என்பதற்காகவும், கட்சியின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும், நிர்வாகிகளும், ஏன் ஒரு கவுன்சிலர் கூட மாற்று கட்சி பிரமுகர்களின் விழாக்களுக்கு செல்லாமலேயே இருந்திருக்கிறார்கள்.. இத்தனைக்கும் அவர்களிடையே ஆழமான நட்பு இருந்தாலும், சொந்தக்காரர்களாகவே இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாத ஒரு அவஸ்தைதான் ஜெயலலிதா காலத்தில் இருந்தது.
கருணாநிதி
இந்நிலையில், முதன்முதலாக மெரினா பீச்சில் மறைந்த இருதலைவர்களையும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.. இது எதை உணர்த்துகிறது.. கருணாநிதியும் சரி, எம்ஜிஆரும் சரி, அரசியலில் இரு துருவங்களாக இருந்தபோதும், தனிப்பட்ட முறையில் அவர்களிடையே நல்ல புரிதல் இருந்தது.. ஆழமான நட்பு இருந்தது.. ஆனால், இப்படிப்பட்ட ஒரு நட்போ, நேசமோ கருணாநிதி, ஜெயலலிதா இடையே இருந்ததில்லை.. இது தமிழகமும் நன்கு அறிந்த ஒன்றுதான்.
மோதல்கள்
அப்படி இருந்தும் தொண்டர்களால் எப்படி இரு தலைவர்களையும் வணங்க முடியும்? ஜெயலலிதா - கருணாநிதி இடையே நிறைய மோதல்கள், கோபங்கள், சண்டைகள், விமர்சனங்கள், இருந்தாலும் கூட, இவர்கள் 2 பேருமே தமிழகத்துக்கு செய்த நல்லவை ஏராளம்.. இவர்கள் 2 பேரும் கொண்டு வந்த நல்ல நல்ல திட்டங்கள்தான் இப்போதும் ஏழை, வெகுஜன மக்களின் வயிற்றில் பால் வார்த்து கொண்டிருக்கின்றன.. தமிழகத்துக்கு நிறைய நல்லவை நடந்ததும் இவர்கள் ஆட்சியில்தான்..!
டெல்லி
கலைஞர் ஒரு வகையிலான ஆட்சியை தந்தார் என்றால், ஜெயலலிதா வேறு வகையான ஆட்சியை நடத்தினார்.. இருவருமே தங்களால் முடிந்த உதவிகளை தமிழகத்துக்கு செய்தார்கள்.. அவர்கள் இருவருக்கும் எல்லாமே இந்த தமிழக மக்கள்தான்.. இவர்களுக்காகவே வாழ்ந்தும் முடித்துவிட்டனர்.. சுருக்கமாக சொல்ல போனால், டெல்லியே அன்று நடுங்கி கொண்டிருந்தது என்றால், இந்த இரு ஆளுமைகளை கண்டுதான்.. ஆனால் இவர்களுடன் எல்லாமே போயாச்சு.
போராட்டம்
உண்மையிலேயே நேற்று தொண்டர்கள் 2 தலைவர்களையும் கும்பிட்டபோது, மனசில் என்ன நினைத்திருப்பார்கள்? இன்று தமிழகம் படும் உயிர்ப் போராட்டத்தை நினைத்துப் பார்த்திருப்பார்களா.. இரு தலைவர்களின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்திருப்பார்களா.. "நீங்க ரெண்டு பேருமே இல்லையே.. என்னாக போகுதோ.. நாங்கள் இனிமேல் எப்படி இருக்க போறோமா.. எங்களை உயிர்தந்து காப்பாற்றவும், பசியின்றி சுகமாக வைத்திருக்கவும் யாருமில்லையே.. உங்கள் அருமை இப்போதுதான் எங்களுக்கு புரிகிறது" என்று இருவரது சமாதியிலும் சொல்லி இருப்பார்களோ...!
மரணங்கள் தலைவர்களிடமிருந்து தொண்டர்களைப் பிரித்திருக்கலாம்.. ஆனால் மனங்களைப் பிரிக்க முடியாதல்லவா!