தூத்துக்குடியில் நாமே போட்டியிட வேண்டும்.. அதிமுகவினர் திடீர் போர்க்கொடி
சென்னை: தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் அந்த கட்சி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு பாஜக சார்பில் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுவார் என்று தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தூத்துக்குடியை அதிமுகவினருக்குத்தான் ஒதுக்க வேண்டும் என அதிமுகவினர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் திகைத்துப் போயுள்ளனர்
கனிமொழியின் மாநிலங்களவை பதவி வரும் ஜூன் மாதத்தோடு முடிகிறது. ஆகவே அவர் மக்களவைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகக கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாகவே தூத்துக்குடி தொகுதியில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதும் அவர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று தூத்துக்குடி என்று கூறப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை களமிறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணலின்போது தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் 41 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நபர் என்று தனித்தனியாக நடைபெறாமல் தொகுதிக்கு வின்னப்ப்பித்தவர்கள் அனைவரையும் ஒருங்கே வரவழைத்து நேர்காணல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி தொகுதிக்கு விண்ணப்பித்திருந்த 41 பேரிடமும் தொகுதி நிலவரம் குறித்து கேள்வி எழுப்பியதுமே நிலவரம் கலவரம் ஆனது.
வந்திருந்த அனைவரும் ஒரே குரலில் தூத்துக்குடி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. தயவு செய்து அதை பாஜகவுக்கு ஒதுக்காதீர்கள். திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவதால் பாஜக போட்டியிட்டால் இப்போதே அந்த தொகுதியின் முடிவை கூறிவிடலாம். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வென்று விடுவார். ஆகவே கனிமொழியை எதிர்க்க அதிமுக சார்பில் ஒருவரைத்தான் நிறுத்தவேண்டும்
ஸ்டெர்லைட் பிரச்சனையில் பாஜகவுக்கு கெட்டபெயர் உள்ளது.
ஆகவே அவர் அங்கு பாஜக போட்டியிட்டால் நிச்சயமாக தோற்றுவிடும். அதிமுக போட்டியிட்டால் ஸ்டெர்லைட்டை மூடியதே அதிமுக தான் என்று பிரச்சாரம் செய்யலாம் என்று கூறியுள்ளனர். அதோடு கனிமொழிக்கு டஃப் பைட் கொடுக்க வேண்டும் என்றால் அது அதிமுகவால் மட்டுமே முடியும். பாஜகவுக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் இடைதேர்தல் நடைபெறும் விளாத்திகுளம் தொகுதியும் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதிக்கும் இடைதேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால் தற்போது அந்த தொகுதிக்கு இடைதேர்தல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாஜக போட்டியிட்டால் அது சட்டப்பேரவை தேர்தல் வெற்றியையும் பாதிக்கும் என அதிமுகவினர் கூறியுள்ளனர்.
அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் இவைதானா.. தலைவர்கள் தீவிர ஆலோசனை.. !
நேர்காணலுக்கு வந்தவர்கள் இப்படி பல்வேறு காரணங்களை அடுக்கியதும் நேர்காணல் நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் திகைத்துப் போய் கேட்டுக் கொண்டிருந்தனராம். இவர்களின் கோரிக்கை அடிப்படையில் ஒருவேளை தூத்துக்குடியில் அதிமுகவே போட்டியிடலாம் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.