ராமநாதபுரத்தில் ஒரு தலைவலி.. அதிமுகவுக்கு.. வேட்பாளர் யார்.. கடும் குழப்பம்
ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் இருந்தாலும் ராமநாதபுரம் தொகுதி ரொம்பவும் கொதிக்க ஆரம்பித்துள்ளது. யாரை இந்த முறை அங்கு நிறுத்தலாம் என்பதில் பரபரப்பு விவாதம் நடந்து வருகிறதாம்.
இப்போது எம்பி.யாக உள்ள அன்வர் ராஜா கட்சியிலும், அரசியலிலும் நன்கு அனுபவம் வாய்ந்தவர். ஆனாலும் தற்போதைய தமிழக அமைச்சர் மணிகண்டனும், அன்வர் ராஜாவும் எலியும், பூனையும் கதை தான்.
இருவருக்கும் தொகுதிக்குள் ஒத்துபோவதே கிடையாதாம். எம்பி நடத்தும் எந்த விழாவிலும் அமைச்சர் கலந்து கொள்வதில்லையாம்.
செல்வாக்கு
அதேபோல, அமைச்சர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் அரசு விழாவாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் அன்வர் ராஜாவும், எம்.ஏ.முனியசாமியும் கலந்து கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணிப்பதால் தொகுதி மக்கள், இவர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கே "ஒருங்கிணைப்பு குழு" அமைக்க வேண்டுமோ என கிண்டலடிக்கின்றனர்.
நீங்கள்தான் காரணம்
இவர்களிடையே நிலவும் கோஷ்டி பூசலை சரிகட்ட கட்சி மேலிடம் அனைத்து சமுதாய மக்களிடமும் செல்வாக்கு பெற்ற முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனை களம் காண்பதற்கு திட்டம் தீட்டுகின்றனர். ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பதவி வகித்த 1991-95 ம் ஆண்டு காலத்தில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை ஆகிய முக்கியமான துறைகளை கையில் வைத்துக்கொண்டு வலுவான அதிகார மையமாக வலம் வந்தவர்தான் கண்ணப்பன்.
மக்கள் தமிழ் தேசம்
96 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த பிறகு, 'தோல்விக்கு காரணம் நீங்கள்தான்' என்று ஜெயலலிதாவிடம் நேரடியாகவே சீறியவர்தான் கண்ணப்பன்.அதன்பின்னர், கோபித்து கொண்டு, அதிமுகவிலிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களுடன், 'மக்கள் தமிழ் தேசம்' என்ற புதிய கட்சியை துவக்கி, தனது பெயரை ராஜகண்ணப்பன் என்று மாற்றிக் கொண்டார். பிறகு திமுகவில் சேர்ந்து அங்கு ஒன்றும் சோபிக்க முடியாமல் திரும்பவும் அதிமுகவுக்கே வந்துவிட்டார்.
சாதீய ஓட்டுக்கள்
இருந்தாலும் ராஜ கண்ணப்பன், மக்களிடையே செல்வாக்கு பெற்றவர். அமைச்சராக இருந்தவர். தொகுதி மக்களின் பிரச்சனைகளை அறிந்தவர். கட்சி மேல்மட்டம் வரை நல்ல பெயரை இப்போது வரை சம்பாதித்து வருபவர். யாதவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், சாதீய ஓட்டுக்கள் நிச்சயம் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.
ஒளிவெள்ளம்
ஒரு வேளை தாங்கள் அமைக்கும் கூட்டணி கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் மத்திய அமைச்சர் ஆகி வலம் வரலாமோ என ராஜகண்ணப்பன் மனத்திரையில் ஒளிவெள்ளம் பாய்ந்திட ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே கேட்டு வேட்பாளர் விண்ணப்பம் செய்து இருப்பதாகவும் தலைமைக் கழக வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளது.