போங்கய்யா... போய் மக்களுக்கு நன்றிய சொல்லுங்கய்யா.. வேட்பாளர்களுக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் வலியுறுத்தல்!
Recommended Video
சென்னை: மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் வாக்களார்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் 17வது மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில் அதிமுக 38 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியது. இதேபோல் சட்டசபை தேர்தலில் 22 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
விலகிய ஆபத்து
சட்டசபை தேர்தலில் இந்த 9 தொகுதிகள் கிடைக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால் இந்த வெற்றியால் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த ஆபத்து விலகியது.
வாக்காளர்களுக்கு நன்றி
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,
மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பல கோடி வாக்குள்
9 சட்டப்பேரவை தொகுதிகளில் மக்கள் அளித்த வெற்றியால் அதிமுக அரசு நிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு பல கோடி பேர் தங்களின் வாக்குகளை அளித்துள்ளனர்.
துரோகம் செய்தவர்கள்
மக்களவையில் அதிமுக குரல் ஒலிக்கும் வகையில் ரவீந்திரநாத் வென்றது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதிமுகவிற்கு துரோகம் செய்தோரை வாக்காளர்கள் புறம் தள்ளியுள்ளனர்.
நன்றி தெரிவிக்கவேண்டும்
இதன்மூலம் இரட்டை இலை சின்னம் நிலை பெற்றிருக்கிறது. உண்மையான இயக்கம் அதிமுகதான் என மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் நிரூபித்துள்ளனர். வாக்காளர்களுக்கு அதிமுக வேட்பாளர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஜூன் முதல்..
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜூன் மாதம் முதல் நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.