ஆஹா.. அதிமுகவுக்கும் சொந்த சானல் வந்தாச்சு.. தொடங்கியது நியூஸ் ஜெ!
நியூஸ் ஜெ சேனலை முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைத்தனர்
சென்னை: அதிமுகவின் புதிய சேனலான நியூஸ் ஜெ. நேற்று தொடங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக இணைந்து இந்த சேனலை ஆரம்பித்து வைத்தார்கள்.
முதமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தங்களது கட்சிக்காகவும் ஆட்சிக்காகவும் நியூஸ் ஜெ. தொலைக்காட்சியை செப்டம்பர் மாதம் துவங்கினர்.
ஜெயா டிவி தங்கள் கையை விட்டு போன நிலையில், தங்களது கட்சிக்கென ஒரு டி.வி தேவைப்படவே இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டது. நியூஸ் ஜெ-வின் லோகோ அறிமுகம், இணையதளத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
விரைவில் தொடக்கம்
அப்போது விழாவில் பேசப்பட்டவை அனைத்தும் நியூஸ்ஜெ டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவாகியது. அந்த அறிமுக விழாவிலேயே ‘நியூஸ் ஜெ' தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவித்தார்கள்.
முதல்வர் - துணை முதல்வர்
அதன்படி நியூஸ் ஜே சேனலின் தொடக்க விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த சேனலை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து ஆரம்பித்தனர். சேனல் துவக்க விழாவில் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்திகள்
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அரசின் திட்டங்கள் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க இந்த சேனல் உதவியாக இருக்கும் என்றும், உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடக்கூடாது என்பதில் இந்த சேனல் உறுதியாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நிர்வாகிகளின் விருப்பம்
டிடிவி தினகரனின் வசம் ஜெயா டிவி போய்விட்டதால், ஆளும் அதிமுகவுக்கு என்று பலம் வாய்ந்த கட்சி என்று இல்லை என்று நிர்வாகிகள் குறைபட்டு வந்தனர். அவர்களின் விருப்பப்பட்டியே அம்மா பத்திரிகை, நியூஸ் ஜெ. சேனல் ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.