அலைகடல் ஓயாது; அதிமுக சாயாது... பொன்விழாவை பொறுக்க முடியாமல் திமுக கோரத் தாண்டவம் -அதிமுக தலைமை
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொன்விழா கொண்டாட்டங்களை கண்டு மனம் பொறுக்க முடியாமல் திமுக கோரத் தாண்டவம் ஆடுவதாக விமர்சித்துள்ளது.
ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது;
கண்டனம்
அதிமுக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வுக்குத் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வாழும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியைத் தேடி இருப்பது கண்டனத்திற்குரியது.
கோரத் தாண்டவம்
அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் எழுச்சிமிகு தருணத்தில், நேற்று தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமான விழாக்களைக் கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக, விடிந்தவுடன் காவல்துறையை ஏவி விட்டு, லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
அலைகடல் போல்
அதிமுக ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம்; இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமல் போகவோ, ஓய்ந்து, சாயப்போவதோ இல்லை. எத்தனை அதிமுக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும், அவதூறு பரப்பினாலும், அதிமுக எதிர்காலத்தில் அடையப் போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இவ்வாறு அவர்கள் இருவரும் அந்த கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
சுருக்கமான அறிக்கை
இதற்கு முன்னர் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது அதிமுக தலைமை விரிவான மற்றும் காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ள ரெய்டு குறித்து சுருக்கமான முறையில் அறிக்கை வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.