ரஷ்யா-உக்ரைன் போல் அடித்து கொள்வதா? அதிமுக தலைமைக்கு ஓட்டெடுப்பு தேவை!புகழேந்தி பரபர பேட்டி
சென்னை: ரஷ்யா-உக்ரைன் போல் அடித்து கொள்வதா?. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவருக்கும் ஓட்டெடுப்பு நடத்தி அதிமுக தலைமையை நிரூபிக்கலாம் என புகழேந்தி கூறியுள்ளார். மேலும், பொதுக்குழுவில் சிவி ச்முகம் காமெடி செய்ததாகவும், எஸ்பி வேலுமணி தமாஷ் செய்ததாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக மாற்ற அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம்
இந்நிலையில் தான் சென்னையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஓ பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டார். ஓ பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டது.
காமெடி செய்யும் சிவி சண்முகம்
இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக பொதுக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என காமெடி செய்து வருகிறார். எஸ்பி வேலுமணியை நினைத்தாலும் தமாசாக உள்ளது. அந்த 23 தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது. மேலும் எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் அந்த தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகிறது எனக் கூறினால், எதற்காக அதனை தயார் செய்ய வேண்டும்?.
எதற்காக தாக்கினார்கள்
டிசம்பர் 1ம் தேதி செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் 5 வருடம் வரை நீட்டிக்கலாம். அதுத எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட பைலா. இதனை திருத்தப் போய் தான் தற்பொழுது பெரும் சர்ச்சை நீடித்து வருகிறது. 11 எம்எல்க்களை கொண்டு வந்ததற்காக தான் ஓ பன்னீர் செல்வத்தை தாக்க முற்பட்டார்களா?. அல்லது முதல்வர் பதவியிலிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் என அறிவித்ததற்காக அடித்தார்களா?. கேசி பழனிச்சாமி, புகழேந்தி, அன்வர் ராஜா, ஆகியோர் காண்பிக்கும் இடத்திலெல்லாம் கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டவர் பன்னீர்செல்வம்.
ரஷ்யா-உக்ரைன் போர் போல்
ஒரு வருடத்திற்கும் முன்பே, அனைத்தையும் விட்டுக்கொடுத்தால் தங்களுக்கு செக் வைப்பார்கள் என்று அவரிடம்(ஓபிஎஸ்) நான் கூறினேன் தற்பொழுது அவ்வாறு நடைபெற்று உள்ளது. பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் வரும்பொழுது நீதிமன்ற உத்தரவை மீறி தற்போது செயல்பட வேண்டாம் அனைத்தையும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறும் பண்பாடு கிடையாதா?. பொதுக்குழுவில் ரஷ்யா உக்ரைன் போல் அடித்து கொள்வதா?.
சிரிப்பு காட்டிய எஸ்பி வேலுமணி
பொதுக்குழுவில் எஸ்பி வேலுமணி திமுகவிற்கு சவால் விடுகிறேன் என்று கூறியதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டதாகவும் தெரிவித்தார். காவல்துறையும் முதல்வரும் சிறிது ஏமாந்து இருந்தால் ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் பொதுக்குழுவில் இருந்து திரும்பி இருக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சியை பொதுமக்கள், விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தீர்மானங்கள் எழுதி நீதிமன்றம் உத்தரவிட்ட பின் தூக்கி எறியப்பட்ட முதல் கூட்டம் இதுதான். குழப்பத்தை உண்டாக்கி அனைவரின் பதிவியும் போவதற்கு சிவி சண்முகம் காரணமாக அமைகிறார்.
ஓபிஎஸ் டெல்லி சென்றது ஏன்?
ஓபிஎஸ் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தான் டெல்லி சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வேறு எதுவும் எனக்கு தெரியாது. பொதுக்குழு தீர்மானத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மதிப்புக்கூட்டு வரியை குறைக்காத திமுகவிற்கு கண்டனம் தெரிவிப்பது இடம்பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது தானே ?. 16வது தீர்மானத்தில் பிரதமருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உள்ளது. இது எதற்கு?.
ஜாதி கட்சியாக...
அதிமுக கட்சியை ஒழிக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டார்கள். இந்த கட்சி ஜாதி கட்சியாக மாறிவிட்டது. ஜெயலலிதா இருந்தபோது பன்னீர்செல்வத்தை தான் அழைத்து அருகில் அமரவைத்து ஆலோசனை மேற்கொள்வார். என்றைக்காவது பழனிச்சாமியை அழைத்து ஆலோசனை கேட்டது உண்டா?. எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய மூவருக்கும் ஓட்டெடுப்பு நடத்தி தலைமையை நிரூபித்து கொள்ளலாம்'' என்றார்.