அந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை
சென்னை: நாளை மறுதினம் (அக்டோபர் 17-ம் தேதி) அதிமுகவின் 48-வது தொடக்கவிழா நடைபெறும் நிலையில், விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகள் கவனமாக இருக்கவேண்டும் என அதிமுக தலைமை உஷார் படுத்தியுள்ளது.
அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்கவிழா நாளை மறுதினம் சென்னையில் நடைபெறுகிறது. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதற்கான விழா ஏற்பாடுகள் தடபுடலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்துப்பிரிவு நிர்வாகிகள் என முக்கிய நபர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அதிமுக தலைமைக்கழகம் விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்த தேர்தல் ஆனாலும் சரி பிரச்சாரம் முடிய 3 நாட்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகம் எழுவது வழக்கமாகும்.
அக்.17-ம் தேதி சென்னையில் நடைபெறும் அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக, அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் 16-ம் தேதி மாலையே தொகுதிகளை விட்டு புறப்பட்டுவிடுவார்கள். இந்தச் சந்தர்பத்தை பயன்படுத்தி திமுக பணப்பட்டுவாடா செய்தாலும் செய்யும், அதற்கு இடமே கொடுக்கவேண்டாம் எனக் கூறப்பட்டதாம். மேலும், அந்த ஒரு நாள் மட்டும் உஷாராக இருக்கவேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளதாம் அதிமுக தலைமை.
இதனிடையே, அக்.17-ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்களை ஒலிக்கவிட்டு, கட்சிக்கொடியேற்றி, எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.கேட்டுக்கொண்டுள்ளனர்.