2 மணிநேரம் ஆலோசனை- எடப்பாடிக்கு 18 அமைச்சர்கள் ஆதரவு- அக்.7-ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக 18 அமைச்சர்கள் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் வரும் 7-ந் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நானே என்பது ஓபிஎஸ் நிலைப்பாடு. அப்படி இல்லையா? கட்சியின் பொதுச்செயலாளர் பதவி எனக்குத்தான்.. என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார் ஓபிஎஸ்.
தேனி அருகே பண்ணைவீட்டில் கடந்த 3 நாட்களாக தமது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இடைவிடாது ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ்தான் அடுத்த முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் - ஓபிஎஸ் பதிவால் ரத்தபூமியாகிப் போச்சு ட்விட்டர்!
கோட்டையில் ஈபிஎஸ் அணி ஆலோசனை
ஆனால் அதிமுகவின் களநிலவரம் பெரும்பாலும் ஓபிஎஸ்-க்கு எதிராகவே இருக்கிறது. அத்தனை லாபிகளுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 6 அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அணி தாவும் அமைச்சர்கள்
நாளை மறுநாள் அக்டோபர் 7-ந் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என அதிமுக அறிவிக்கும் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி கேபி. முனுசாமி பேட்டியளித்திருந்தார். தற்போதைய நிலையில் அதிமுகவில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகிறது. இதனிடையே ஓபிஎஸ் அணியில் ஒரு காலும் ஈபிஎஸ் அணியில் ஒரு காலுமாக இருக்கும் அமைச்சர்கள் குறித்தும் கோட்டை ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாம்.
எடப்பாடிக்கு 18 அமைச்சர்கள் ஆதரவு
கோட்டையில் நடைபெற்ற ஆலோசனையில் 18 அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் வரும் 7-ந் தேதி திட்டமிட்டபடி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்ஸை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
ஆளுநருடன் இன்று ஈபிஎஸ் சந்திப்பு
இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். இது ஓபிஎஸ் ஆதரவு நிலையில் இருக்கும் அமைச்சர்கள் சிலருக்கு பெரும் அச்சத்தையும் கொடுத்திருக்கிறதாம். எங்கே தங்களுக்கு எதிரான நடவடிக்கை பாயுமோ என்பதுதான் அந்த அச்சமாம். அதிமுகவில் தொடரும் இந்த அக்கபோர் அந்த கட்சி தொண்டர்களை பெருமளவு சோர்வடைய வைத்துள்ளது.