எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் - ஓபிஎஸ் பதிவால் ரத்தபூமியாகிப் போச்சு ட்விட்டர்!
சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் போட்ட பகவத் கீதை மேற்கோள் பதிவால் ட்விட்டர் பக்கமே ரணகளமாக கிடக்கிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ரணகளமாக ட்விட்டரில் மோதி வருகின்றனர்.
அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிவிட்டு பெரியகுளம் பண்ணை வீட்டில் முகாமிட்டிருக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ். தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தொடர் நெருக்கடிகளை கொடுத்து வருகிறார் ஓபிஎஸ்.
ஆனால் முதல்வர் ஈபிஎஸ் தரப்போ, ஓபிஎஸ் கை ஓங்க விடுவது இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. இதனால் அதிமுகவில் உச்சகட்ட குழப்பம், மோதல் நிலவுகிறது.
ஓபிஎஸ்- நாளைய முதல்வரே என 100 அடி பேனரை தாங்கி பிடித்து வரவேற்ற ஆதரவாளர்கள்!
விட்டு தர ஓபிஎஸ் மறுப்பு
இதனிடையே கடந்த சில நாட்களாக பெரியகுளத்தில் உள்ள பண்ணைவீட்டில் ஓபிஎஸ் முகாமிட்டுள்ளார். அங்கு தமது ஆதரவாளர்களுடன் இடைவிடாமல் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ்ஸை பொறுத்தவரையில் இம்மியளவும் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்றே தெரிகிறது.
ட்விட்டரில் பதிவு
இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இன்று பகவத் கீதையை ஓபிஎஸ் மேற்கோள் காட்டியிருந்தார். "தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!! என்பதுதான் ஓபிஎஸ் ட்விட்டர் பதிவு.
தேவையில்லாத விளையாட்டு
இதனை முன்வைத்து ட்விட்டரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உக்கிரமாக மோதி வருகின்றனர். @aiswaryavenkat என்பவர், நீங்கள் செய்வது சரியில்லை. எடப்பாடி தன்னை முதல்வராக மட்டுமல்ல, மக்களிடம் அடையாளப்படுத்தி சில நற்பெயர்கள் பெற்றுள்ளார். கட்சி அவரை முன்னிறுத்தி வெற்றிபெற வழிதேடாமல் நீயா நானா விளையாட்டு ஸ்டாலினுக்கே உதவும். உங்கள் நோக்கம் அதுவானால் எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாக நடக்காது என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
விட்டுக் கொடுத்து போங்க
@ManivannanNaga7 என்ற நெட்டிசன், Sir எது எப்படியோ.. அதிமுக ஆட்சி தொடர வேண்டும் .. எனவே அதற்கு எந்த முடிவு சரியாக இருக்குமோ அதை முடிவு செய்யுங்கள்.. சுய விருப்பத்திற்கு இது நேரம் இல்லை.. ஏனெனில் எக்காரணம் கொண்டும் தற்போது உள்ள எதிர் கட்சி ஆட்சிக்கு வரவே கூடாது... இதுதான் தமிழக மக்களின் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார். @GopalanVs என்ற பதிவரோ, ஒன்னு விட்டுக் கொடுங்க - சில நிபந்தனைகளுடன் அல்லது விட்டுக் கொடுக்க வைங்க சில நிபந்தனைகளுக்குட்பட்டு. வெளிப்படையான சண்டை திமுகவிற்கு நல்லது. தமிழகத்திற்கு ஆபத்து. என சுட்டிக்காட்டியுள்ளார். @RagupathiRa என்பவர், முதலமைச்சர் பதவி வேண்டும் என்றால் எடப்பாடியும் விட்டுகொடுக்கலாம் அல்லாவா ஒன்றுக்கு மூன்று முறை விட்டுக்கொடுத்தவரை புண்படுத்தலாமா உரிய மரியாதை கொடுத்து வைத்திரௌந்தால் இந்த பிரச்சினையே இல்லை இதை எடப்பாடி அவர் குரூப் உணரவேண்டும்.! என கூறியுள்ளார்.
நீங்க விசுவாசமானவர் இல்லையே
@sivakumar1_offl என்பவர் சற்று காட்டமாகவே, நீங்கள் இதுவரை யாருக்கு தான் விஸ்வாசமாக இருந்துள்ளீர்கள்.? உங்களுக்கு பதவி கொடுத்து இந்த அளவுக்கு உயர்த்திவிட்ட சின்னம்மா சசிகலா அவர்களுக்கு எதிராகவே துரோகம் செய்தவர். அதிமுக'வை பாஜகவிடம் அடகுவைத்து கட்சியை சீர்குலைத்தீர்கள்.. இவ்வளவு நாள் பதவியில் இருந்து விட்டு இப்போது என்ன? என கொந்தளித்திருக்கிறார். @DBPXPAovpRDDYf8 என்ற பதிவர், முதலில் நீங்கள் அவமானப் படுவதற்குள் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள். கட்சி தான் முக்கியம் என்பதை உணர்த்துங்கள். நிர்வாகிகளை தவிர்த்து தொண்டர்களை சந்தியுங்கள். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என ஒரு அறிக்கை விடுங்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.