திமுகவை முந்திய அதிமுக... ஒரே நாளில் நேர்காணல் நிறைவு... விரைவில் வேட்பாளர் பட்டியல் ரெடி?
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஸ் முன்னிலையில் நடைபெற்ற நேர்காணல் நிறைவடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் மார்ச் 10ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் காலில் சக்கரத்தை சுட்டிக்கொண்டு ஓடுவது போல அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக திமுகவைவிட அதிமுக படு வேகமாகக் காய்களை நகர்த்தி வருகிறது. ஏற்கனவே, பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டையும் இறுதி செய்துவிட்டது. தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், அதிமுக சார்பில் விருப்ப மனு அளிக்கும் தேதியும் குறைக்கப்பட்டது.
"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி".. அப்ப மக்கள் நலக் கூட்டணி?.. அதிமுக பொளேர் கேள்வி!
இருப்பினும், அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 8000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்தனர். இந்நிலையில், விருப்ப மனு தாக்கல் செய்த அனைவருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை தொடங்கிய நேர்காணல், மண்டலம் வாரியாக விறுவிறுவேன நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நேர்காணல் தற்போது நிறைவடைந்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இருவரும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.