ராதாபுரம் ரிசல்ட்டை இப்போதே சொல்லிடுவேன்.. அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை
Recommended Video
சென்னை: ராதாபுரம் சட்டசபை தொகுதியின் ரிசல்ட்டை இப்போதே சொல்லிவிடுவேன் என அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேச்சால் சர்ச்சை எழுந்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார் இன்பதுரை.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இன்பதுரை 69,596 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதனிடையே உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை வெளியிட அக்டோபர் 23-ஆம் தேதி வரை தடை விதித்தது. இந்த நிலையில் அமமுகவில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்து, அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த பரணி கார்த்திகேயன் தமது ஆதரவாளர்கள் 3000 பேரை ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைத்தார்.
இதற்கான விழா சென்னை அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் பேசுகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டசபை தேர்தல்களில் திமுக கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும். அது போல் ராதாபுரம் தொகுதியின் முடிவையும் இப்போதே சொல்லிவிடுவேன்.
ஆனால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்பதால் சொல்லவில்லை. 15 தொகுதிகளில் முறைகேடு செய்து அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்றார் ஸ்டாலின். ராதாபுரம் குறித்த ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.