தலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி!
Recommended Video
சென்னை: அதிமுகவின் மாஸ்டர் ஸ்டிரோக் என்று இதைச் சொல்லலாம். தமிழகத்தில் உள்ள 7 தனித் தொகுதிகளில் 5ல் அதிமுக போட்டியிடுகிறது. இரண்டு தொகுதிகளை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
மறுபக்கம் திமுக 3 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலையில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுவது திமுக தரப்பை அதிர வைத்துள்ளது. அதேசமயம், ஒட்டுமொத்த தலித் வாக்காளர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்து விட்டது அதிமுக.
அதிக தனி தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது பெரும் பாராட்டுக்களைக் குவிக்க ஆரம்பித்துள்ளது. நாங்கள் உயர் ஜாதியினருக்கான கட்சி அல்ல.. தலித் மக்களும் எங்களுக்கு முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது அதிமுக. இதை நிச்சயம் மிகப் பெரிய அதிரடி என்றே சொல்ல வேண்டும்.
தலித்துகளின் மனதை மொத்தமாக அள்ளிய அதிமுக.. 5 தனி தொகுதிகளில் போட்டி.. திமுகவுக்கு நெருக்கடி!
3ல் திமுக
திமுகவைப் பொறுத்தவரை தென்கோடியில் தென்காசி தனி, வட கோடியில் காஞ்சிபுரம் தனி, மேற்கில் நீலகிரி தனி என 3 தனி தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 4 தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்து விட்டது. பெரும்பாலான தனித் தொகுதிகளில் தான் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதால் திமுக மீது அதிருப்தியும் எழுந்தது. இது குறித்து நாம் ஒரு செய்தியும் வெளியிட்டிருந்தோம்.
அதிரடி அதிமுக
நாம் சொன்னதை அதிமுக புரிந்து கொண்டதோ என்னவோ, இன்று தனது அதிரடியைக் காட்டி விட்டது. அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் 5 தனித் தொகுதிகள் என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சிதம்பரம் (தனி), நீலகிரி (தனி), நாகப்பட்டனம் (தனி), திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம் (தனி) ஆகிய ஐந்து தனித் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
தகுதியான தலைமை
தலைமை என்றால் அது லீட் செய்து போக வேண்டும். அந்த அடிப்படையில் தான் அதிக தலித் தொகுதிகளில் நிற்க அதிமுக முடிவு செய்திருப்பது உண்மையிலேயே பாராட்டுதலுக்குரியது என்று பலரும் சொல்கின்றனர். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக, அனைத்து ஜாதியினரையும் அரவணைத்துச் செல்லும் முடிவு இது என்றும் அதிமுகவுக்கு பாராட்டுதல்கள் குவிகின்றன.
செம போட்டி
இந்த ஐந்து தனித் தொகுதிகளில் அதிமுக திமுக இடையே காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய இரு தொகுதிகளில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ ராசா போட்டியிடவுள்ளார்.
2 காரணம்
தலித் தொகுதிகளை அதிமுக அதிகமாக கையில் எடுக்க 2 காரணங்களைச் சொல்லலாம். ஒன்று திமுகவை விட நாங்கள்தான் தலித்துகள் மீது அக்கறையாக இருக்கிறோம் என்று காட்டி ஒட்டு மொத்த தலித்துகளை கவரும் திட்டம். 2வது பண பலத்தை அதிகமாக இறக்கி ஈஸியாக வாக்குகளை அள்ளலாம் என்ற எண்ணமும் அதிமுகவுக்கு இருக்கலாம். அதேபோல வட தமிழகத்தை மட்டுமே திமுக முக்கியமாக கருதுகிறது. ஆனால் அதிமுகவோ ஒட்டுமொத்த தமிழகமும் எங்களுக்கு முக்கியம் என்பதைக் காட்டி விட்டது.
எப்படியோ மொத்தத்தில் திமுகவை பெரும் நெருக்கடிக்கு கொண்டு போய் தள்ளி விட்டது அதிமுகவின் தொகுதிப் பட்டியல்.