என் ஆர் காங்கிரஸுக்கு புதுவை மக்களவை தொகுதி ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது!
சென்னை: முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் அதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த கட்சிக்கு புதுவை மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அதிமுக, பாஜக, பாமக ஆகியன ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டுவிட்டது.
இந்த நிலையில் தேமுதிகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதில் தங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்குமாறி கோரியது. இதனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தேமுதிக 4 தொகுதிகளுக்கு இறங்கி வந்துள்ளது.
ஆனால் பாமக கேட்ட தொகுதிகளையே தேமுதிகவும் கேட்டுள்ளது. இதனால் கூட்டணி இறுதி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அதோடு அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் மக்களவை தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டது.
அது போல் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வருகை தந்தார். அவர் புதுச்சேரியை தங்களுக்கு ஒதுக்குமாறு தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. புதுச்சேரி தொகுதி என் ஆர் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.