ஏன் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட சீட் தரவில்லை திமுகவும், அதிமுகவும்?
இஸ்லாமிய வேட்பாளருக்கு அதிமுக திமுக கட்சிகள், சீட் வழங்கவில்லை.
Recommended Video
சென்னை: வாரிசுகளை களமிறக்கி மாநிலத்துக்கே ஷாக் தந்த திமுக, அதிமுகவும், இஸ்லாமிய சமுதாய மக்களின் அதிருப்தியையும் சேர்த்தே அள்ளி கொண்டுள்ளது!
இதுவரை திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்து, இப்படி ஒரு புகைச்சலும், சலசலப்பும் ஏற்பட்டது இல்லை. இதில் பிரதானமாக பேசப்பட்டு வருவது, சிறுபான்மை சமூகத்தினருக்கு சீட் ஒதுக்காததுதான்!
கருணாநிதி இருந்தபோது கூட்டணி கட்சிகளுக்கு 2 அல்லது 3 சீட்டுக்களையாவது ஒதுக்கிவிடுவார். இதேதான் ஜெயலலிதாவும். இதில் ஒரு படிமேலே சென்ற ஜெயலலிதா, கடந்த முறை தேர்தலில் ராமநாதபுரத்தில் அன்வர்ராஜாவை நேரடியாகவே தன் கட்சி சார்பாக நிறுத்தி இஸ்லாமிய சமுதாய மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
சத்யனை நாலா பக்கமும் ரவுண்டு கட்டும் அதிருப்தி.. நீந்தி கரையேறுவாரா ராஜன் செல்லப்பா மகன்!
தலா 20
ஆனால் இன்றோ.. அதிமுகவும், திமுகவும், கூட்டணிகளுக்கு கொடுத்தது போக மீதமுள்ள தலா 20 சீட்களை தன்னகத்தே வைத்து கொண்டாலும் இருவருமே முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதுதான் வேதனையும் அதிர்ச்சியும் கலந்த விஷயம்! திமுக கூட்டணியில் இந்திய முஸ்லீம் கட்சி இருக்கிறது. அதனால் ஒரு சீட் ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
முஸ்லீம் கட்சி
ஆனால் தான் நேரடியாக போட்டியிடும் 20 தொகுதிகளில் ஒன்றில்கூட இஸ்லாமிய வேட்பாளரை திமுக நிறுத்தவில்லை... இதைவிட மோசம் அதிமுக! அந்த கூட்டணியில் முஸ்லீம் கட்சி எதுவுமே இல்லை. சரி கட்சி சார்பாகவாவது யாரையாவது நிறுத்துவார்கள் என்று பார்த்தால் யாரையும் போடவில்லை. இப்படி மதச்சார்பின்மையின்பால் ஆட்சி புரிகிறோம் என்று சொல்லி கொள்ளும் இரு திராவிட கட்சிகளும் இன்று சிறுபான்மை சமூகத்தினருக்கு முக்கியத்துவத்தை தரவில்லையோ அல்லது அவர்களை விலக்கி வைத்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாமக தரப்பு
மத்திய சென்னை தொகுதியை எடுத்து கொண்டால், இஸ்லாமியர்கள் இங்கு அதிகம். இந்த தொகுதிக்குள், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, எழும்பூர், சூளை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரியமேடு என பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக தரப்பில் சாம்பால் என்பவரும், திமுகவின் தயாநிதி மாறனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கமீலா நாசர்
அப்பட்டமான இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்று தெரிந்தும், அதிமுக இந்த தொகுதியை ஏன் தவிர்த்துள்ளது என்பதும், வாரிசு அரசியலில் சிக்கி எழ முடியாத அளவில் திமுக ஏன் தவித்து வருகிறது என்பதும் புரியாத புதிராக உள்ளது. இந்த விஷயத்தில் கமலை பாராட்டியே ஆகவேண்டும். யதார்த்தத்தை உணர்ந்து கமீலா நாசரை நிறுத்துவதாக சொல்லப்படுவது போற்றத்தக்கது! மத்திய சென்னை ஒரு உதாரணம்தான்.. இஸ்லாமிய சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் மாற்று சமூக வேட்பாளரை நிறுத்தினால் ஓட்டுக்கள் பிரியும் என்ற நிலை இருந்தும், எதற்காக அதிமுக, திமுக இரு கட்சிகளுமே இச்சமுதாயத்தினரை தள்ளி வைத்து பார்க்கிறது.
வியப்பு
பாஜகவுக்கு ஒதுக்கிய 5 தொகுதிகளில் எப்படியும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இருக்க போவதில்லை. ஆனால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களின் முக்கியத்துவத்தை அறிந்த அதிமுக, திமுக ஏன் யாரையும் நிறுத்தவில்லை என்பது வியப்புக்குரிய கேள்வி.தமிழ்நாட்டிலேயே இப்படி ஒரு புறக்கணிப்பு என்றால், நாளை மக்களவையில் இச்சமுதாயத்தினருக்காக யார் குரல் எழுப்புவார்கள்? அப்படி ஒரு குரலே இந்த சமுதாய மக்களுக்காக எழுப்பாவிட்டால், இது எப்படி மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்? இப்படி ஒரு இனத்தையே ஓரங்கட்டி ஒதுக்கி வைப்பது பார்ப்பது இந்திய ஜனநாயகத்துக்கு அழகா?
ஜாதி, மதம்
பொதுவாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ஜாதி மதம் பார்த்து வாக்களிப்பதில்லை. அந்த நாகரீகத்தை அவர்கள் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். அதேபோல, எந்த இஸ்லாமிய பிரதிநிதியும் இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதியாக இருந்தது இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் கட்சிக்கான பிரதிநிநிதியாக மட்டுமே செயல்பட்டுள்ளனர். இது கடந்த கால வரலாறு நமக்கு புகட்டிய பாடம்.
எதிர்ப்பு ஓட்டு
ஆனால் இப்படி இருந்தும்கூட, தேர்தல் சமயங்களில் சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக பார்க்கும் அவலம் இன்றும் தொடர்வது வேதனையாக உள்ளது. திமுக, அதிமுக, இரு பிரதான கட்சியுமே சிறுபான்மை மக்களின் அதிருப்தியை அறுவடை செய்துவிட்டார்கள். அப்படியானால் இச்சமூகத்தினரின் எதிர்ப்பு ஓட்டுக்கள் நாளை யாருக்கு சாதகமாக அமைய போகிறது?!