புதுச்சேரியில் அதிமுக- பாஜக கூட்டணி அரசு; தமிழகத்தில் திமுக ஆட்சி.. இதுதான் நடக்கப் போகிறதா?
சென்னை/ புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் திமுக, அதிமுக கட்சிகள் கையில் எடுத்திருக்கும் வியூகங்கள் பல்வேறு சந்தேகங்களையும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றன.
திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதற்காக கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்கள்தான் ஒதுக்கப்படும் என தொடக்கம் முதலே கூறப்பட்டு வருகிறது. அதிக இடங்களில் போட்டி என்கிற ஒற்றை காரணத்துக்காக திமுக இப்படி முடிவெடுக்கிறது என கருதப்பட்டது.
புதுவை திமுக வியூகம்
ஆனால் புதுச்சேரியில் திடீரென திமுக கையில் எடுத்திருக்கும் வியூகம் அனைவரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு திமுக தனித்து போட்டியிடும் அல்லது என்.ஆர். காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது. திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்தான் என்பதையும் நேற்றைய ஆலோசனை கூட்டம் தெளிவுபடுத்தி உள்ளது.
பாஜக பார்முலா
புதுச்சேரியில் அதிமுக-பாஜக அணியில்தான் என்.ஆர். காங்கிரஸ் உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ், திமுக அணியில் இடம்பெறுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே புதுவையில் தள்ளாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, எந்த கட்சியின் தயவுமே இல்லாமல் தள்ளிவிடப்பட்டுவிட்டது. காங்கிரஸ் அல்லாத பாரதம் அல்லது காங்கிரஸ் இல்லாத மாநிலங்கள் என்கிற பாஜகவின் முழக்கம் புதுவையின் அனேகமாக வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துவிடும் என்பதையே இந்த போக்குகள் காட்டுகின்றன.
புதுவையில் அதிமுக பாஜக?
புதுவையில் திமுக கையில் எடுத்திருக்கும் வியூகமானது ஒருவகையில் அதிமுக அணிக்கு கை கொடுக்கவே வாய்ப்பிருக்கிறது. புதுவையில் அதிமுக ஆட்சி அமைத்தால் பாஜகவும் அந்த அரசாங்கத்தில் இடம்பெறும். இதன் மூலம் புதுச்சேரியில் கால்பதித்துவிட்டோம் என பாஜகவால் பிரகடனம் செய்து கொள்ளவும் முடியும்.
அமமுகவால் அதிமுகவுக்கு சிக்கல்
தமிழகத்தில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்டுகள் மூலம் நெருக்கடி கொடுத்து வெளியேற்றினால் அந்த கட்சிகளுக்கான ஒரேவாய்ப்பு அமமுகதான். அமமுகவுடன் இணைந்து கூட்டணி அமைத்தால் அந்த அணியானது அதிமுகவின் வாக்குகளைத்தான் பிரிக்கப் போகிறது என்பதை திமுக தலைமை உணர்ந்தே உள்ளது. ஏபிபி- சிவோட்டர் சர்வே கூட இதனையே சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆகையால் அமமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைந்தால் அதிமுகவுக்குதான் படு சேதாரம்; அது திமுகவின் எளிதான வெற்றிக்கு வழிவகுக்கும்.
இப்படித்தான் நடக்கப் போகிறதா?
திமுகவின் தற்போதைய புதிய வியூகங்களால் புதுவையில் அதிமுக- பாஜக ஆட்சியும் தமிழகத்தில் திமுக ஆட்சியும் அமையும் சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளன. இவை வெறும் யதார்த்தமான சூழ்நிலைகளா? அல்லது கட்சிகள் திட்டமிட்டு திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி அரங்கேற்றும் ஓரங்க நாடகங்களா? என்பதுதான் அரசியல் களத்தில் பிரதான விவாதம்.