"அம்மா இப்போ உங்களுக்கு போன் பண்ணுவாங்க.. அதிமுகவின் அதிரடி திட்டம்
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் ஆடியோ குரல் கேட்க போகிறதாம்.
சென்னை: "அம்மா இப்போ உங்களுக்கு போன் பண்ணுவாங்க.. உங்க பேர் சொல்லி பேசுவாங்க.. ஓட்டு கேட்பாங்க" என்ற புது ஐடியாவை அதிமுக தேர்தல் வியூகமாக இறக்க போகிறது.
தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே இல்லாமல் முதல்முறையாக சந்திக்க போகும் தேர்தல் இது என்பதால் இரு கட்சிகளிடமும் மும்முரம் ஏற்பட்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுகவும், ஆட்சியை பிடிக்க திமுகவும் தேர்தல் யுக்திகளை புதுசாக அணுக ஆரம்பித்துள்ளனர். இந்த விஷயத்தில் அதிமுக ஒருபடி மேல போய்விட்டது. சமூகவலைதளங்களில் வாக்கு சேகரிப்பு வேலை ஆரம்பமாகி உள்ளது.
தலைவர்களின் ஆடியோ
ஒவ்வொருத்தர் செல்போனிலும் அம்மாவே பெயர் சொல்லி கூப்பிட்டு அதிமுகவுக்கு ஓட்டு போடும்படி கேட்க போவதுதான் அந்த புது ஐடியாவாம்! பொதுவாக பிரச்சார சமயங்களில், ஓட்டு கேட்பது போல கட்சி தலைவர்களின் குரல் பதிவு செய்யப்பட்டு, வாக்காளர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஆர்கே நகர்
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் இதனை ஜெயலலிதா இருந்தபோது சரியாகவே பயன்படுத்தினார்கள். அதிக அளவு வெற்றியையும் இது தேடி தந்தது. ஆர்.கே.நகர் தேர்தலிலும் இதே யுக்திதான் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் அதே பாணியை இந்த முறையையும் பின்பற்ற அதிமுக முடிவு செய்துள்ளதாம்.
தகவல் தொழில் நுட்ப குழு
அதாவது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர்தான் இது போன்ற ஒரு பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ளனர். வரும் தேர்தல் பிரசாரத்தில் குரல் பதிவு தொழில் நுட்பத்தை அதிமுக மேலும் மேம்படுத்தி இருக்கிறது. அதில் வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு அந்த ஆடியோ வரும். ஜெயலலிதாவின் குரலில் பதிவான பிரசார ஆடியோ அது.
பிரச்சார குரல்
அதில் செல்போன் எண்ணுக்கு உரியவரின் பெயரை ஜெயலலிதா கூப்பிட்டு, அதிமுகவுக்கு வாக்கு கேட்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளதாம்! மேலும் இந்த பிரசார குரல் தினமும் லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயிக்க போகிறார்களோ, இல்லையோ, தங்களின் பெயர்களை அம்மாவே அழைத்து ஓட்டு கேட்டு பேச போவதால் தொண்டர்கள் உற்சாகமாகி உள்ளார்களாம்!