Exclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி
சென்னை: தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி கூறிய நிலையில், அவர் எதை வைத்து அந்தக் கருத்தை திரும்ப திரும்ப கூறுகிறார் என தமக்கு புரியவில்லை என்கிறார் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி. இந்நிலையில் இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் குறிப்பிட்ட இடங்களை கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி தருகிறதா?
பதில்: அதிமுகவை பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதன்படி தான் விண்ணப்ப படிவம் பெறுதல் உள்ளிட்ட அறிவிப்புகளை கட்சித் தலைமை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. பொதுக்குழு நடைபெற இருக்கிறது, அதில் கலந்து பேசி அதன் பின்னர் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும், முதல்வர் இ.பி.எஸ்.சும் யாருக்கு எந்தெந்த இடங்களை கொடுப்பது என்பது பற்றி முடிவெடுப்பார்கள். இப்போதே அந்தக் கட்சி அதை கேட்கிறது, இந்தக் கட்சி இதைக் கேட்கிறது என வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம். அதெல்லாம் வதந்தி என்பதால் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
கேள்வி: உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது, பொதுக்குழு கூடவுள்ளது, இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அமெரிக்கா சென்று இருக்க வேண்டுமா?
பதில்: துணை முதலமைச்சர் அண்ணன் ஓ.பி.எஸ்.ஸின் அமெரிக்கா சுற்றுப்பயணம் என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டது. வெறும் 10 நாள் பயணம் தான். பொதுக்குழு கூட்டம் திடீரென்று எடுக்கப்பட்ட முடிவும். அதுவும் ஓ.பி.எஸ். வந்த பின்னர் தான் நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விவகாரமும் அப்படிதான். அதனால் இவைகளோடு அவரது பயணத்தை ஒப்பிடத் தேவையில்லை.
மு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்
கேள்வி: தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்...
பதில்: (கேள்வியை முடிப்பதற்கு முன்பே) அவர் எதை வைத்து வெற்றிடம், வெற்றிடம் எனக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. ரஜினிகாந்தின் கருத்தை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆளுமைத் திறன் இல்லாமல் ஆட்சியை எப்படி நடத்த முடியும்? கட்சியை எப்படி நடத்த முடியும்? ஆளுமைத் திறன் இருப்பதனால் தானே ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்துகிறார்கள். மீண்டும் சொல்கிறேன் ரஜினி எதை வைத்து அந்தக் கருத்தை சொல்கிறார் என புரியவில்லை.
கேள்வி: ரஜினி கருத்து குறித்து ஓ.பி.எஸ். பதில் தரவில்லை... ஏன் தயக்கம்?
பதில்: இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அருமையான பதிலை சொல்லிவிட்டார். இதற்கு மேல் ரஜினிக்கு யார் பதில் தர முடியும். அந்தளவுக்கு சரியான பதிலடியை பேட்டியில் கொடுத்துவிட்டார். இதனால் அவர் சொன்னால் என்ன, இவர் சொன்னால் என்ன..இரண்டு பேரும் ஒன்றுதான், அதனால் நீங்கள் பிரித்து பார்க்க வேண்டாம்.
கேள்வி: அமைச்சர்கள் சர்ச்சையாக கருத்துக்களை வெளியிடுவது தொடர்கதையாகி வருகிறதே... அதை முதல்வர் தடுக்கலாமே?
பதில்: அமைச்சர்கள் அவரவர்களுக்கு தெரிந்த கருத்துக்களை கூறுகிறார்கள்..அவ்வளவு தான், மற்றபடி ஒன்றுமில்லை. முதல்வரும் உரிய விளக்கம் எல்லாம் அளித்திருக்கிறார். கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் பேசுகிறார்கள். அதை ஒரு சிலர் திரித்து தவறாக புரிந்துக்கொண்டு பொய்யான செய்திகளை பரப்புகின்றனர்.