"விஷம் குடிச்சது.. யாருக்காக, நான் சொல்லட்டா?".. அதிமுக பொதுகுழுவில்.. உதயநிதி மீது பாய்ந்த வளர்மதி!
உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார் வளர்மதி
சென்னை: " உதயநிதி ஸ்டாலின் விஷம் குடிச்சது யாருக்காக. எதுக்காக, நான் சொல்லட்டுமா? உண்மையை சொன்னால், நாடே சிரித்து விடும்" என்று, திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மீது பாய்ந்துள்ளார் முன்னாள் அமைச்சர் வளர்மதி.
பாஜகவின் தொடர் அழுத்தம், ஆட்சியைத் தக்க வைக்க முடியுமான்னு தெரியலை, கூட்டணி கட்சிகளின் சிக்கல், உட்கட்சி பூசல் என பல்வேறு பிரச்சனைகள் பின்னிக்கிடக்க, மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது... 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வேறு சில சுமூக முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம், இன்றைய கூட்டத்தில் ஒவ்வொரு கட்சி தலைவர்களின் பேச்சும் ரொம்பவும் தரை லோக்கலாக இருந்துள்ளது போல.. வளர்மதி பேச்சு அதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் போல இருக்கிறது...!
வளர்மதி
அந்த வகையில், முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான வளர்மதியின் பேச்சுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது.. இதற்கு காரணம், உதயநிதியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.. அத்துடன் அவரது பேச்சுக்கு வார்னிங்கும் செய்துள்ளார். வளர்மதி பேசிய பேச்சு இதுதான்:
தீய சக்தி கருணாநிதி
"வரும் தேர்தல் என்பது நமக்கு ராமாயண போர் போன்றது... இதில், எடப்பாடியாரும் - ஓ. பன்னீர்செல்வமும் ராமன் - லட்சுமணன் ஆவார்கள். முக ஸ்டாலினின் பிரச்சாரக் கூட்டம் ராணுவனின் கூட்டமாகும்... அன்றே எம்ஜிஆர் சொன்னார், கருணாநிதி ஒரு தீய சக்தி என்று... இந்த தேர்தலுடன் திமுகவின் கதையை முடிக்க வேண்டும். பிரச்சாரக் கூட்டத்தில் எல்லாமும் ஊழலாட்சி என்று ஸ்டாலின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்
ஊழலாட்சி என்னும் சொல்லி திரியும் கூட்டமெல்லாம் உத்தமர் காந்தியின் வீட்டு பேரன்களா? கருணாநிதியின் வீட்டு பிள்ளைகள் தானே? ஊழல் செய்தே பழக்கப்பட்டவர்கள்தான் திமுகவினர்.. இப்போது எங்களை பற்றி இவர்கள் சொல்வது வேடிக்கையாக இருந்து வருகிறது.. சில நாட்களாக ஸ்டாலின் கூட்டம் அண்ணன் எடப்பாடியாரை பற்றி ரொம்ப கேவலமாக அருவெறுப்பாக பேசித் திரிகிறார்கள்... நான் ஒன்றை மட்டும் சொல்றேன்.. அண்ணன் எடப்பாடியாரைப் பற்றி தாறுமாறாக பேசினால் நாங்களும் திருப்பி பேசுவோம், நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீங்க.
தீரன் சின்னமலை
உங்களை பற்றி தெரியாதா என்ன? எடப்பாடியாரை பற்றி பேசும் உதயநிதி.. அன்னைக்கு விஷம் குடிச்சது யாருக்காக? சொல்லட்டுமா? கதை நாறி போய்டும்.. நாங்க பேசினால் நாடு சிரித்து போய்விடும்... தங்கத்தின் தங்கமாக விளங்கும் எங்கள் அண்ணன் எடப்பாடியாரை பார்த்து பேசினால் நாக்கு அழுகி போய்விடும். எடப்பாடி தீரன் சின்னமலை என்றால் ஓபிஎஸ் பூலித் தேவன்... இந்த இயக்கத்தை இருவரும் வழி நடத்துகிறார்கள்..
எடப்பாடியார்
நாமதான் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து மறுபடியும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுத் தரவேண்டும்... சமீபத்தில்கூட அண்ணன் பிஹெச் பாண்டியன் சிலை திறப்பு விழாவில் 2 பேரும் ஒரே காரில் வந்தாங்களே. பார்க்கறதுக்கு அப்படியே மருது சகோதரர்களை போல இருவரும் வந்திறங்கினார்களே.. அப்படிப்பட்ட காட்சி பல பேருக்கு வயிற்றெரிச்சலை தந்துவிட்டது.. அதான்.. அவர்கள் வயிறு எரிந்துகொண்டே இருக்கட்டும்... நாம் ஒற்றுமையாக இருந்து எடப்பாடியாரை மறுபடியும் ஆட்சி கட்டிலில் உட்கார வைக்க வேண்டும்" என்று வளர்மதி பேசினார் .
அதிர்ச்சி
வளர்மதி இப்படியெல்லாம் பேசி ரொம்ப நாள் ஆகிறது.. அன்று அமைச்சராக இருந்தபோது, ஒவ்வொரு மேடையிலும் இப்படித்தான் பேசுவார்.. சின்ன வயசில் இவரது மேடைபேச்சை எம்ஜிஆரே கண்டு வியந்ததாக சொல்வார்கள்.. இப்போது அதே வளர்மதி மறுபடியும் விஸ்வரூபமெடுத்து வந்துள்ளதும், உதயநிதியை இந்த அளவுக்கு விமர்சித்துள்ளதும் திமுக தரப்புக்கு அதிர்ச்சியை தந்து வருகிறதாம்!