காது கொடுத்து கேட்க முடியவில்லை... புகாரோ புகார்.. அதிமுக நிர்வாகிகள் குமுறல்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய நிலையில் அவர்கள் அளித்த புகார்கள் இருவரையும் திக்குமுக்காடச் செய்திருக்கின்றன.
மாவட்டச் செயலாளர்கள் மீதும், எம்.எல்.ஏக்கள் மீதும் அதிமுக அடிமட்ட நிர்வாகிகள் புகார்களை கூறி தங்களது உள்ளக் குமுறலை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.முன்னிலையில் வெளிப்படுப்படுத்தியுள்ளனர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களுமே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டது.
நிலைமை கைமீறிவிட்டது... எங்கள் கட்டுப்பாட்டில் யாரும் இல்லை... கைவிரித்த இஸ்லாமிய கூட்டமைப்பு
4 நாட்கள்
அதிமுக வளர்ச்சிப்பணிகள் மற்றும் வர இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து சந்தித்தனர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.. கடந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கிய இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை செவ்வாய்கிழமையுடன் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சியை அதிமுக தலைமை நிறுத்திக்கொண்டது. இதையடுத்து புதன், வியாழக்கிழமைகளில் சந்திக்க இருந்த மாவட்ட நிர்வாகிகளை நேற்றும், நேற்று முன் தினமும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். சந்தித்து பேசினர்.
குறைகள்
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மீதும், அமைச்சர்கள் மீதும் புகார் கூறியுள்ளனர். நிர்வாகிகள் கூறிய புகார்களை குறிப்பெடுத்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், விசாரிக்கிறேன் எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். ஒரு சிலர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் தெரிவித்துள்ளார்கள். கான்ட்ராக்ட் வேலைகளை கட்சிக்காரர்களுக்கு கொடுப்பதில்லை, உறவினர்களை வைத்து எம்.எல்.ஏ.க்களே அந்தப் பணிகளை செய்துகொள்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்கள்.
செலவு
எம்.எல்.ஏ.க்கள் காண்ட்ராக்ட் வேலைகள் கொடுத்தால் தான் தங்களால் கட்சிக்கு செலவு செய்ய முடியும் என்றும், இல்லையென்றால் ஒன்றுமே செய்ய முடியாது எனவும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரிடம் நேரடியாகவே சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இது தொடர்பாக பார்த்துக்கொள்கிறோம் என அவர்கள் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். மேலும், அரசு பதவியில் இருக்கும் பிரமுகர்கள் சொந்தக்கட்சிக்காரன் என்று கூட பார்க்காமல் சில விவகாரங்களில் கட் அண்ட் ரைட்டாக இருப்பதாகவும் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
தேர்தல் பணி
நிர்வாகிகள் கூறிய புகார்களை கேட்டுக்கொண்ட அதிமுக தலைமை, எதைப்பற்றியும் கவலைப்படாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் கவனம் செலுத்துங்கள், தேர்தல் ஏப்ரலில் நடைபெறும் என்பதால் இப்போதே அவரவர் பகுதிகளில் அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. இதனிடையே கூட்டத்துக்கு வந்த அதிமுக நிர்வாகிகள் கூட்ட அரங்கத்திற்குள் செல்லும் போது செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.