இஃப்தார் விருந்து.. சத்தம் போடாமல் அடக்கி வாசிக்கும் அதிமுக!
சென்னை: புனித ரமலான் மாதம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக சார்பாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா இருந்தவரை ஆண்டுதோறும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தடபுடல் ஏற்பாடுகளுடன் அதிமுகவின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறும். இஸ்லாமிய சமுதாய தொழிலதிபர்கள், மருத்துவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரையும் அழைத்து ஜெயல்லிதா பெருமைப்படுத்துவார்.
ஆனால் அவர் மறைந்ததில் இருந்து அந்த நிகழ்ச்சி ஒப்புக்கு நடத்தப்படுவதாக கூறுகின்றனர் அதிமுகவில் உள்ள சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளே. நோன்புக்கஞ்சி, வடை, பேரிச்சம்பழம், ப்ரூட் சாலட், பழரசம், உள்ளிட்டவைகளோடு இன்னும் சில பதார்த்தங்களும் 5 நட்சத்திர ஹோட்டலில் ஆர்டர் கொடுக்கப்பட்டு, அரபு நாடுகளில் நடக்கும் இஃப்தார் விருந்தை போலவே ஜெயலலிதாவும் அளிப்பார் என தெரிவிக்கிறார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பெயருக்கு இஃப்தார் விருந்து நடப்பதாகவும், ஜெயலலிதா கடைப்பிடித்த எந்த செயல்முறைகளையும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முறையாக பின்பற்றுவதில்லை எனவும் கூறுகிறார் அதிமுக சிறுபான்மை பிரிவை சேர்ந்த முக்கிய நிர்வாகி.
இதனிடையே தேர்தல் முடிவுக்குப் பின், இந்தாண்டு இஃப்தார் நடத்தலாமா, வேண்டாமா என தங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் வைத்து நடத்தலாம் என முடிவெடுத்துள்ளார்களாம் ஒ.பி.எஸ்.சும்., இ.பி.எஸ்.சும். ஆனால் தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் வேண்டாம் என்றும், அடக்கியே வாசிப்போம் எனவும் தலைமை நினைப்பதாக, கூறுகிறார் அந்த நிர்வாகி.
என்னமோ போங்க அம்மா இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா என்று அதிமுக சிறுபான்மை பிரிவினர் புலம்புகின்றனர்.