என்னாது.. கடைசி நேரத்தில் பாஜகவை கழற்றி விட அதிமுக திட்டமிடுகிறதா??
Recommended Video
சென்னை: பாஜக அதிமுக கூட்டணி அமைந்துவிடும் இது நேச்சுரல் அலையன்ஸ் என்று பாஜகவினரும், பாஜகவின் பெயரைக் கூட குறிப்பிடாமல் ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் சிலரும் தேசியக் கட்சியோடு கூட்டணி என்றே பேசி வந்தனர், இந்நிலையில் பாஜகவை அதிமுக கை கழுவும் என்றே தெரிகிறது.
தமிழகத்தின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கும் பாஜகவோடு கூட்டணி வைப்பபது அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் உட்பட பல தலைவர்களுக்கும் பிடிக்கவில்லை. அதனுடைய வெளிப்பாடாகவே மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை தொடர்ந்து பேசி வருகிறார். ஆனாலும் தம்பிதுரை எனது சகோதரர், அவருக்கும் எனக்கும் சண்டை மூட்டி விடப் பார்க்கிறீர்களா என்றெல்லாம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கேட்டு வருகிறார்.
கடந்த வாரத்தில் ஒரு இரவு நேரத்தில் சுபயோக சுபதினத்தில் டெல்லியில் இருந்து பறந்து வந்தார் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக பொறுப்பாளருமான பியுஸ் கோயல். நள்ளிரவு வரை அதிமுக தலைவர்களுடன் பேசியும் எந்த முடிவும் எட்டப்படாத சூழலில் மீண்டும் டெல்லிக்கு பறந்து சென்று விட்டார். எப்போதும் எல்லாவற்றிற்கும் புதிய பரிமாணத்தில் விளக்கம் அளிக்கும் அமைச்சர் ஜெயக்குமாரும் பியுஸ் கோயல் அதிமுக தலைவரால் சந்திப்புக்கு புதிய விளக்கம் ஒன்றை கொடுத்தார். தலைவர்கள் சந்தித்துப் பேசினால் அது கூட்டணியாகி விடாது என்று அசரடித்தார். அதாவது பியுஸ் கோயலும், முரளிதரராவும், தமிழிசையும், பொன்.ராதாவும் அதிமுகவுடன் கூட்டணிக்காக பேசிக்கொண்டு இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவித்து விடுவோம் என்று பறைசாற்றிய சூழலில்தான் நமது அமைச்சர் இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணி அமைந்தால் தம்பிதுரை போன்ற சீனியர் லீடர்கள் அதிமுகவில் தொடர்வார்களா என்ற கவலையும் அதிமுக தலைமைக்கு ஏற்பட்ட்ருப்பதாகவும் அதனால் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் மீண்டும் கெட்டபெயர் ஏற்பட்டால் அது வாக்குகளை பாதிக்கும் என்று அதிமுக தலைமை கருதுகிறதாம். அதனால் தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு அதிமுகவின் முக்கிய கூட்டத்தை கூட்டி பெரும்பாலான உறுப்பினர்களும் நிர்வாகிகளும் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்று பதில் கூறிவிடலாம் என்று அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் தெளிவாக கூறுவது என்றால் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு விட்டால் இருக்கும் அரசுக்கு முழு அதிகாரம் இருக்காது. அது ஒரு காபந்து அரசாகவே இருக்கும். ஆகவே தங்களுக்கு பெரிய ஆபத்துகள் இருக்காது. அதனால் தங்களுக்கு ரெய்டுகள் போன்ற தொல்லைகள் இருக்காது என்பது அதிமுகவின் எண்ணம்.
அடுத்ததாக அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு கூட்டணி கட்சிகளாக இருக்கும் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் மூலமும் காய் நகர்த்த அதிமுக திட்டமிட்டுள்ளது. அரசோடு முட்டல் மோதலில் இருந்த கருணாஸ் இப்போது அரசுக்காக நான், அரசால் நான் என்று சட்டமன்றத்தில் முழக்கமிட்டு சமாதானம் ஆகிவிட்டார். இவர்களிடம் பேசிய அதிமுக தலைமை எழுவர் விடுதலையில் உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக கூறியது போல இப்போதும் உங்கள் நிலைப்பாட்டை கூறிவிடுங்கள், அதாவது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இந்த மூவரும் அதிமுகவுடன் இருக்க மாட்டோம் என்பதை தெளிவு படுத்துங்கள் என்று கூறப்பட்டதாம். அவர்களும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தினகரனுடனோ அல்லது திமுகவுடனோ சென்று விடலாம் என்று எண்ணியிருந்தனர்.
இதையே ஒரு சிக்னல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் தமிமுன் அன்சாரி. ஆளுனரை எதிர்த்து தர்ணா செய்து வரும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை நேற்று சந்த்தித்து பேசியுள்ளார். அதாவது அவர் அதிமுகவுக்கு சொல்ல விரும்பும் சேதி என்னவென்றால் நீங்கள் பாஜகவுடன் கூட்டணி என்றால் எங்களை ஆதரிக்க காங்கிரஸ் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆகவே இப்படிப்பட்ட கூட்டல் கழித்தல் கணக்குகளை வைத்துக் கொண்டு அதிமுக தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பாஜகவை கை கழுவுவதற்காக வாய்ப்புகள் நிறையவே உள்ளது என்கிறார்கள் அதிமுக உள்விவரம் அறிந்தவர்கள்