கமலுக்கு தூண்டில் போடும் அதிமுக.. தேமுதிக ஜகா வாங்குவதால் திடீர் முடிவு?
சென்னை: தனித்து போட்டியிடுவது கமல்ஹாசனின் எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதன் மூலம் கமல்ஹாசனை அதிமுக கூட்டணி அழைப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கமல்ஹாசனை தூற்றாத அமைச்சர்களே இல்லை என்ற அளவுக்கு அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
தவறான ஒன்று
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 2018-க்கான மேன்மை மற்றும் மதிப்புமிக்க கூட்டுறவு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவது அவர்களது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல. அது தவறான ஒன்று என்று கூறியுள்ளார்.
சந்தேகம்
நேற்று மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, 4 படங்கள் ஓடினாலே நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்து விடுகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் கமல்ஹாசனுக்கு அறிவுரை கூறியிருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஸ்டாலின்
அதிமுக கூட்டணிக்கு போகவிருந்த தேமுதிக தொகுதி பங்கீடு இழுபறி காரணமாக அந்த முடிவிலிருந்து ஜகா வாங்கியுள்ளது. மேலும் இன்று விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். இதையடுத்து உடனடியாக ஸ்டாலினிடமும் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தினார்.
வலை வீச்சு
எனவே தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அதிமுக வலை வீசுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.