அதிமுகவின் தலைமையைக் கைப்பற்றுவாரா சசிகலா - குரு பெயர்ச்சி சாதகமா? பாதகமா?
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தனது அதிரடி அரசியலை ஆரம்பித்து விட்டார். அவருக்கு தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறதா? சசிகலாவிற்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை சசிகலாவிற்கு எல்லாமே சாதகமாக நடந்தது. ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை அடைந்தாலும் அவருக்கு நிலைக்கவில்லை. மீண்டும் அதிரடி அரசியலை ஆரம்பித்து விட்டார். அதிமுகவில் சசிகலாவிற்கு தலைமையேற்கும் தகுதியும் யோகமும் இருக்கிறதா நிகழப்போகும் குருப்பெயர்ச்சி சசிகலாவிற்கு சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா என்று பார்க்கலாம்.
சசிகலா பிறந்தது 18/08/1954. கடக லக்கினம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம். அவரது ஜாதகப்படி இப்போது ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என கிரகங்கள் எல்லாமே சாதகமாக உள்ளன. லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியிருந்தாலும் அவருக்கு தற்போது தசா புத்தியை பார்த்தால் ராகு திசை நடைபெறுகிறது.
தியாகத்தலைவியா..? சசிகலா அப்படி என்ன தியாகம் செய்தார்..? சொல்லுங்க... ஜெயக்குமார் ஆவேசம்..!
ராகு திசை 18 ஆண்டுகள் உள்ளன. அவருக்கு செவ்வாய் திசை முடியும் தருணத்தில் சிறைக்கு போனார். ராகு திசையில் சிறை செல்லும் அளவிற்கு அவமானங்களை பட்ட சசிகலாவிற்கு இப்போது உடல்நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் செவ்வாயும் ராகுவும் இணைந்துள்ளதுதான். இதன் காரணமாக செவ்வாய் திசையில் படாத பாடு பட்டு சிறைக்கு சென்று ராகு திசையில் வீடு திரும்பினார்.
சசிகலா ஜாதகத்தில் யோகங்கள்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலே அந்த தசாபுத்தி நடைபெறும் போது பல அவமானங்களை பட வேண்டும் என்பது விதி. அதன் பலனைத்தான் சசிகலா இப்போது அனுபவிக்கிறார் என்கின்றனர் ஜோதிடர்கள். சசிகலா ஜாதகத்தில் கஜ கேசரி யோகம், முசல யோகம், உச்சம் பெற்ற சனி,குரு சண்டாள யோகம் என பல யோகங்கள் இருந்தாலும் அவருக்கு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகே சிரமத்திசைதான். அதனால்தான் முதல்வராக வேண்டும் என்று நினைத்த சசிகலாவினால் வெற்றி பெற முடியாமல் போனது என்பது ஜோதிடர்களின் கருத்தாகும்.
விஐபிக்கள் நட்பு
சசிகலா ஜாதகத்தில் 10ஆம் இடத்தை லக்கினாதிபதி சூரியன் பார்த்ததால் உலகம் அறிந்த நபராக ஆனார். பொதுவாக ஒருவர் நாடறிய வேண்டும் என்றால், மக்கள் மத்தியில் புகழ் பெற்றவராக இருக்க வேண்டும் என்றால் 10ஆம் இடத்தில் ஒரு பாப கிரகம் அல்லது பார்வை இருக்க வேண்டும். பொதுவாக திரிகோணாதிபதி திரிகோணம் ஏறினால் அரசர்களின் தொடர்பு, பெரும் பதவியில் இருப்பவர்களின் நட்பு நிச்சயம் கிடைக்கும். மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் நட்பும் கிடைத்தது. ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாக உயர்ந்தார்.
சிறை சென்ற சசிகலா
ஜெயலலிதாவின் பின்னாடியே இருந்தவர் சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை எல்லாமே சாதகமாக நடந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். முதல்வராக நினைத்தால் அது முடியவில்லை. மாறாக சிறை சென்றார். பதவிகள் இழந்து புகழ் செல்வாக்கு இழந்து சிறையில் வாடினார்.
மீன ராசிக்காரர்களுக்கு எப்படி
இந்த ஆண்டு துவக்கத்தில் அவர் சிறையில் இருந்து விடுதலையானலும் சில காலங்கள் அமைதியாகவே இருந்தார். குரு அதிசாரமாக கும்ப ராசிக்கு போன போது அமைதியாக இருந்த சசிகலா, குரு மீண்டும் மகர ராசிக்கு திரும்பி பின்னர் தனது அதிரடி அரசியலை ஆரம்பித்து விட்டார். இது லேசான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழப்போகும குரு பெயர்ச்சி மீன ராசியில் பிறந்த சசிகலாவிற்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
Recommended Video
குரு பார்வை எப்படி
குரு பகவான் மீன ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்து 5ஆம் பார்வையால் தங்களின் ராசியின் 4ஆம் இடமான வித்யா ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் 6ம் இடமான ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தையும் , 9ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8ம் இடமான ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார். ராசிநாதன் குரு நீசம் பெற்று கஷ்டங்கள் கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது பன்னிரண்டில் மறைந்தாலும் இடம் கொடுத்த சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெறுவது சிறப்பாகும்.
நிதானம் தேவை
குரு மீன ராசிக்கு தனம் மற்றும் பாக்கிய அதிபதியாக விளங்கும் செவ்வாய் சாரத்தில் கும்பத்தில் நுழைவது உடன் குருவின் பார்வை செவ்வாய்க்கு கிடைப்பது நன்மையைத் தருகிறது. வெற்றியைத் தரக்கூடிய 11ஆம் இடத்தில் அமர்ந்திருந்த குரு தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. ஓய்வற்ற நிலையின் காரணமாக உடலில் சுகவீனம் தோன்றும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பயம் பதற்றம் தேடி வரும்
மீன ராசியின் மீது சனியின் பார்வை பதிவதால் எந்த ஒரு முடிவும் தீர்க்க ஆலோசனை செய்யாமல் அவசரமாக செயல்பட வேண்டாம். குருவே தங்களுக்கு பத்தாம் அதிபதியாக வந்து தொழிலை நிர்ணயம் செய்வது உடன் 12ஆம் வீட்டில் மறைவதால் தொழில் சார்ந்த பிரச்சினைகளில் அதிக கவனம் இருக்க வேண்டும். ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். ஆன்மிக ரீதியாக தொலைதுாரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். தத்துவ சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். ஆலோசனை கேட்காமல் எடுக்கும் எந்த ஒரு முடிவும் தோல்வியையே தரும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும்.
சாதகமற்ற குரு பெயர்ச்சி
சசிகலாவிற்கு இது லாப சனி காலமாக இருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வது சாதகமாக இருக்காது. அதிமுகவிற்கு எதிராக அவர் எதுவும் செய்ய மாட்டார். நிறைய சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தலைவியாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. சசிகலாவின் ஜாதகப்படி அரசியலில் பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு இல்லை. இந்த குரு பெயர்ச்சியும் சுமாரான பலனைத் தருவதால் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் அமைதியாக இருப்பதே அவருக்கு நல்லது.