அதெப்படி எங்களை கூப்பிடாமல் நடத்தலாம்.. தகராறில் குதித்த அதிமுகவினர்.. கெஞ்சிய ஆசிரியர்கள்
அதிமுகவினர் பள்ளி ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
Recommended Video
சென்னை: "அதெப்படி எங்களை விழாவுக்கு கூப்பிடாமல் இருக்கலாம்?" என்று மேடையேறி பள்ளி ஆசிரியர்களிடத்தில் அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர்.
செங்குன்றத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சிக்குள் புகுந்து உள்ளூர் அதிமுகவினர் ஆசிரியர்களிடம் தகராறு செய்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்குன்றத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. லயன்ஸ் கிளப் சார்பில் 3 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை இந்த பள்ளியில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாதான் நடைபெற்று கொண்டிருந்தது.
விழா மேடை
மாணவர்கள் குழுமி இருக்க, மேடையில் பள்ளி நிர்வாகத்தினர் விழாவை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு சில அதிமுகவினர் அதாவது அக்கட்சியின் நகர செயலாளர் தாராசிங் மற்றும் உமாபதி ஆகியோர் மேடையிலேயே ஏறிவிட்டனர்.
ஏன் கூப்பிடல
"இவ்வளவு பெரிய விழா நடத்தறீங்க? எங்களை ஏன் இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லை?" என்று அங்கிருந்த ஆசிரியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கொஞ்சமும் எதிர்பாராத ஆசிரியர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்து சொல்லியும், அதிமுகவினர் கேள்விகளை கேட்டுக் கொண்டு ரகளையில் இறங்கினர்.
கையெடுத்து கும்பிட்டனர்
தர்மசங்கடப்பட்ட ஆசிரியர்கள் வேறு வழியின்றி அதிமுகவினரிடம் கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு கொண்டனர். அப்போதும் அதிமுகவினர் தொடர்ந்து தகராறு செய்ததால் சம்பவ இடத்திற்கு போலீஸே வந்துவிட்டது. பின்னர் போலீசாரே அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
முக சுளிப்பு
இவ்வளவு அமர்க்களமும் பள்ளி மாணவர்கள் முன்னிலையிலேயே நடைபெற்று முடிந்தது. இது வீடியோவாக வெளிவந்து பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி பெரும்பாலானோருக்கு முகசுளிப்பை ஏற்படுத்தி வருகிறது.