எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம்... இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!
சென்னை: எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யும் விவகாரத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை.
ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியதால் அதிமுக தலைமை அலுவலகம் பதற்றமாகவே காணப்பட்டது. மேலும், அதிமுக தோல்விக்கு இ.பி.எஸ். தான் காரணம் என தனது மனதில் இருந்ததை வெளிப்படையாக போட்டுடைத்தார் ஓ.பி.எஸ்.
முதலமைச்சர் வேட்பாளரை ஏற்கனவே விட்டுக் கொடுத்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என ஓ.பி.எஸ். தரப்பு கறார் காட்டி வருகிறது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற இ.பி.எஸ். தரப்பும் முயற்சித்து வருகிறது.
இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதால் யார் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் அதிமுக மட்டும் தனித்து 65 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் புதிய தொற்று.. கண் பார்வை முற்றிலும் பறிபோகும் அபாயம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில், அங்கு சசிகலா ஆதரவாளர்களின் போஸ்டர்கள் அதிகம் தென்படத் தொடங்கியுள்ளது. துரோகிகளை துவம்சம் செய்யவுள்ள தூய உள்ளமே, நிரந்தர பொதுச்செயலாளரே, உள்ளிட்ட வாசகங்கள் சசிகலாவை புகழ்ந்து அந்த போஸ்டர்களில் இடம்பெற்றிருக்கின்றன.