வக்பு வாரியத் தலைவரானார் முகமது ஜான்.. பல கோடி மதிப்பு சொத்துக்களை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பு..!
சென்னை: தமிழக வக்பு வாரியத் தலைவராக அதிமுக மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக வக்பு வாரியத்திற்கு தலைவர் இல்லாமல் இருந்த நிலையில் அவர் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வக்பு வாரியத்துக்கு உள்ள நிலையில் அதனை நிர்வகிக்கும் பணிகளை முகமது ஜான் எம்.பி. மேற்கொள்ள உள்ளார்.
தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம்... டிசம்பர் மாதம் டூரை தொடங்கும் பிரேமலதா விஜயகாந்த்..!
தலைவர் பதவி
சமுதாய மக்களுக்காகவும், பள்ளிவாசல்களின் வருமானத்துக்காகவும், வசதி படைத்த இஸ்லாமியர்கள் பலர் தங்கள் சொத்தில் சில பங்கை தானமாக வழங்குவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படி வழங்கப்படும் சொத்துக்களை கண்காணித்து நிதி நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல், தர்ஹாக்களில் ஏற்படும் நிர்வாக சிக்கல்களை தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் வக்பு வாரியம்.
ஓராண்டுக்கு மேல்
தமிழக வக்பு வாரியம் கலைக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேல் யாரும் தலைவராக நியமிக்கப்படாததால் பல குளறுபடிகள் அரங்கேறி வந்தன. ஐ.ஏ.எஸ். அதிகாரியை கொண்டு வாரியத்தை நடத்தும் அரசின் முடிவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனிடையே இது தொடர்பான வழக்கில் வக்பு வாரியம் கலைக்கப்பட்டது செல்லாது என நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியதை அடுத்து புதிய தலைவர் மற்றும் உறுப்பினர் நியமிக்கப்பட்டு அவர்கள் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.
கட்சி தான் ஜமாத்
மாநிலங்களவை குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் அதிமுக எம்.பி. முகமது ஜானை ஜமாத்தில் நீக்கிய சம்பவம் நடைபெற்றது. அப்போது கட்சியா? சமுதாயமா? என்ற கேள்வி எழுந்தபோது எனக்கு கட்சி தான் ஜமாத் என விட்டுக்கொடுக்காமல் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தியவர் முகமது ஜான். இப்படிபட்டவரை கவுரவிக்கும் பொருட்டு வக்பு வாரியத் தலைவர் பதவியில் அமர வைத்திருக்கிறார் இ.பி.எஸ்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தமிழக வக்பு வாரியச் சட்டப்படி நியமன உறுப்பினர்களை விட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும். இதனிடையே இதற்கு முன்னதாக இந்த பதவியில் அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.