அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட்... தள்ளிப்போகும் அறிவிப்பு... ஏமாற்றத்தில் நிர்வாகிகள்
சென்னை: அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் தயாராக உள்ள நிலையில், அது தொடர்பான அறிவிப்பு தள்ளிப்போவதால் நிர்வாகிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இன்னும் 10 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் அதனை எதிர்கொள்ள வசதியாக புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் பெரும்பாலான அமைச்சர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதா பாணியில் ஒரு சில மாவட்டங்களுக்கு புதிய முகங்களையும் தேர்வு செய்து வைத்துள்ளது அதிமுக தலைமை.
ப்ளஸ் 2 புதிய பாடத்திட்ட முறை மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கக் கூடாது - டிடிவி தினகரன்
கட்சிப்பதவி
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அவ்வப்போது அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். ஒரு நிர்வாகியை பற்றி வரும் புகாரை தீர விசாரித்து தவறு செய்திருப்பது உண்மை எனத் தெரியவந்தால், எவ்வித தயவு தாட்சண்யமும் பார்க்காமல் பதவியை பறித்து வீட்டுக்கு அனுப்ப தயங்கமாட்டார். ஜெயலலிதாவின் இந்த துணிச்சலும், அதிரடியும் தான் புதிய முகங்களை அதிமுகவை நோக்கி ஈர்த்து அதில் உறுப்பினராக இணைய வைத்தது.
நிர்வாகிகள்
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவில் பெரியளவில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இப்போது கட்சிக்கு புத்துயிரூட்டும் முயற்சியாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது அதிமுக தலைமை. முதற்கட்டமாக தகவல்தொழில் நுட்ப அணி நிர்வாகிகளை மண்டல வாரியாக நியமித்துள்ள ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்., அடுத்தக்கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிடும் திட்டத்தில் உள்ளதாகவும் அதில் ஒரு சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிர்வாகிகள் எதிர்பார்ப்பு
சுமார் 3 மாதங்களுக்கு மேலாக இது தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் அதிமுக அடிமட்ட நிர்வாகிகள், சிட்டிங் மாவட்டச் செயலாளர்கள் பலர் மீது தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, சாத்தான்குளம் வழக்கு, என அடுத்தடுத்து கடும் நெருக்கடி ஏற்பட்ட காரணத்தால் கட்சி ரீதியான அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதற்குள் ஒரு சிலர் இந்த விவகாரத்துடன் சசிகலா விடுதலை தொடர்பாக முடிச்சுப்போட்டுவிட்டனர்.
எதிர்கொள்ளும் திறமை
புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் கணிசமான எண்ணிக்கையில் அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் அவர்களால் தான் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவை எதிர்கொள்ள முடியும் என்பது அதிமுக தலைமையின் எண்ணமாம். மேலும் புதிய முகங்களுக்கும் இந்த முறை பல மாவட்டங்களில் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம்.