அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் ரெடி... சிபாரிசுகளுக்கு இடமில்லை...!
சென்னை: அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் தயாராக உள்ள நிலையில் அதில் பழையவர்கள், புதியவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம்.
ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைவாசத்துக்கு பிறகு கட்சியில் முன்னெடுக்கக் கூடிய பெரிய மாற்றம் இது என்பதால் அதிமுகவினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பும், பரபரப்பும் காணப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் உள்ளவர்களின் பெயர்கள் அனைத்தும் ஒன்றுக்கு மூன்று முறை பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டதாம்.
160 முதல் 175 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக... இடப்பங்கீட்டில் அதீத கவனம்..!
ஆளுங்கட்சி
அதிமுகவில் கட்சி ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் அதன் முதல் நடவடிக்கையாக, ஊராட்சி செயலாளர்கள் பதவி ரத்து என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்போது மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை அமையவுள்ளது. இதற்கான புதிய பட்டியலும் தயாரிக்கப்பட்டுவிட்டதாம்.
சட்டமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தல் பணிகளை துடிப்புடன் செய்யக் கூடிய நபர்களை தேடிப்பிடித்து புதிய மாவட்டச் செயலாளர் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம். மேலும் இந்த லிஸ்டில் 40% பேர் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் என்றும், 60 % பேர் மட்டுமே புதிதாக இடம்பெற்றுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை பொறுத்தவரை அதிமுக தலைமை அலசி ஆராய்ந்த பின்னரே பலரது பெயர்கள் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
தகுதி அடிப்படையில்
அதிமுகவின் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் என பல தரப்பில் இருந்து மாவட்டச் செயலாளர் பதவிக்காக ஏகப்பட்ட சிபாரிசுகளும், கோரிக்கைகளும் அக்கட்சியின் தலைமைக்கு வந்துள்ளன. ஆனால் அது அப்படியே புறந்தள்ளப்பட்டு, தகுதி, விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய உறுப்பினர்கள்
இதேபோல் அதிமுகவின் சார்பு அணிகளான இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளையும் வலுவாக கட்டமைக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்குமாம். அதிமுகவின் சார்பு அணிகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளதாம்.