இது ஈபிஎஸ் கட்சி அல்ல.. அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்தான் உள்ளனர்.. ஜேசிடி பிரபாகர் பரபர பேட்டி
சென்னை: ‛‛அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி அல்ல. இது தொண்டர்களின் கட்சி. நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள நிலையில் தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வத்தின் பக்கம் தான் உள்ளனர்'' என ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் பதவியை பெற ஆதரவாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்து வருகிறார்.
2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி
இதற்கு கட்சியின் ஒருங்கிணையப்பாளரான ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, கட்சியில் இரட்டை தலைமை தான் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்
ஓ பன்னீர்செல்வத்துக்கு அவமானம்
இந்நிலையில் தான் சென்னையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் திட்டம் இருந்தது. இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றமும் பொதுக்குழுவில் புதிய தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு மத்தியில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.
பாதியில் வெளியேறிய ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் மேடையில் இருந்து இறக்கி விடப்பட்டனர். இதற்கு ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக சிவி சண்முகம் அறிவித்ததோடு, பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ல் நடக்கும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர். அப்போது ஓ பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டது.
ஜேசிடி பிரபாகர் குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகரன் இன்று கூறியதாவது: ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமி தான். செயல்திட்டத்தில் இல்லாததை பேச அனுமதித்ததே தவறு. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திட்டமிட்டே ஒற்றை தலைமை விவகாரம் விவாதமாக்கப்பட்டது.
திட்டமிட்டு அவமதிப்பு
பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ பன்னீர்செல்வத்தை அவமதித்து உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் பேசியபோது பாதியில் மைக்கை ஆப் செய்தனர். தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. ஒற்றை தலைமை என ஏற்கனவே கூறியதை தான் பொதுக்குழுவில் ஒப்பித்தனர். பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும்.
ஓபிஎஸ் பக்கம் தொண்டர்கள்
அதிமுக என்பது ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமா கட்சியோ, சொத்தோ அல்ல. இது தொண்டர்களின் கட்சி. கட்சி நிர்வாகிகள் பழனிச்சாமி பக்கம் உள்ள நிலையில் தொண்டர்கள் ஓ பன்னீர்செல்வத்தின் பக்கம் தான் உள்ளனர்.
அதிமுகவை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்தை பின் தொடரலாம். அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன்'' என்றார்.