பாஜகவிற்கு 'இன்டிகேட்டர்' போட்டு, திமுகவிற்கு 'கையை காட்டி..' ஆஹா.. ஓபிஎஸ் ரூட்டை கவனித்தீர்களா!
ஓபிஎஸ் நிலைப்பாடு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சென்னை: அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் கட்சிக்குள் எடப்பாடி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தாலும், கட்சிக்கு வெளியே அவரது செயல்பாடுகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
அதிமுக இப்போது இரண்டு பிரிவுகளாகப் பிளந்து - எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக தொடர்பான வழக்கு சுப்ரீம் கோட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட ஓ பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பலரையும் வியப்பில் ஆழ்த்துவதாகவே உள்ளது.
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
அதிமுக
அதிமுக இப்போது இரண்டு பிரிவுகளாக உள்ளது அனைவருக்கும் தெரியும். இதில் எடப்பாடி எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நேர் எதிரான நிலைப்பாட்டையே ஓ பன்னீர்செல்வம் எடுத்து வருகிறார். தான் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தான் கையெழுத்திட்டுச் சமர்ப்பிக்கும் வேட்பாளரை ஏற்க வேண்டும் என்று எடப்பாடி மனுத்தாக்கல் செய்தால்... அந்த மனுவையே நிராகரிக்க வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ். இப்படி தனது அரசியல் எதிர்காலத்திற்கு எடப்பாடியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செக் வைத்து வருகிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்
ஆனால், கட்சிக்கு வெளியே அவரது செயல்பாடுகள் ஆச்சரியம் தருவதாகவே உள்ளது. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்... ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. ஆனால், அதிமுகவில் இன்னுமே சிக்கல் தொடர்ந்தே வருகிறது. எடப்பாடி, ஓபிஎஸ் என இருவரும் வேட்பாளரை இறக்குவோம் என்று அறிவித்தது முதலே அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் எடப்பாடி வேட்பாளரை அறிவித்த நிலையில், பின்னாலே ஓபிஎஸ்ஸும் அறிவித்தார்.
பாஜக போட்டியிட்டால் வாபஸ்
அத்துடன் நிற்காமல் இன்னொரு முக்கிய விஷயத்தைச் சேர்த்துச் சொல்லிவிட்டுச் சென்றார் ஓபிஎஸ். அதாவது தங்கள் வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கிவார் என்றும்.. அதேநேரம் பாஜக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் வாபஸ் பெறவும் ரெடி என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார் ஓபிஎஸ். எடப்பாடி போட்டியிடுவதில் உறுதியாக இருக்கும் நிலையில், அதை செக் வைக்கவே ஓபிஎஸ் இந்தமுடிவை எடுத்துள்ளார்.
எதற்காக
அதேநேரம் பாஜக போட்டியிட்டால் வாபஸ் பெற ரெடி என்று சொல்லியதன் மூலம், தனக்கு வேண்டியது என்ன என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டார். இருப்பினும், பாஜக இந்த இடைத்தேர்தலில் இரு பிரிவுகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்றே விரும்புகிறது. இதன் காரணமாகவே சிடி ரவி நேற்று ஓபிஎஸ் எடப்பாடி என இருவரையும் சந்தித்துப் பேசினார். இந்த விவகாரத்தில் இன்னுமே கூட தெளிவான ஒரு முடிவு கிடைக்கவில்லை. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் குழம்பிப் போய் உள்ளனர் அதிமுக தொண்டர்கள்.
பேனா நினைவு சின்னம்
இது ஒரு பக்கம் இருக்கக் கருணாநிதிக்குப் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் ஷாக் கொடுத்துள்ளார் ஓபிஎஸ். பேனா நினைவுச்சின்னம் அமைக்க திமுகவுக்கு எதிர்த் தரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பல கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கடலுக்கு உள்ளே பேனா நினைவுச் சின்னத்தை நிச்சயம் அமைக்கக் கூடாது என்று திட்டவட்டமாக வலியுறுத்தினர்.
வரவேற்ற ஒபிஎஸ்
திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட அரசியல் இயக்கமே அதிமுக.. அதிலும் திமுகவைத் தீய சக்தி என்றும் அதை ஒழித்தே ஆக வேண்டும் என்றவர் அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர். எனவே, திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே அதிமுக பல விவகாரங்களிலும் எடுக்கும். ஆனால், யாருக்கும் எதிர்பார்க்காத வகையில் பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் வரவேற்போம் என்று சொல்லி அதிர்ச்சி அளித்துள்ளார் ஓபிஎஸ்.. எடப்பாடி தரப்பு பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.
பிரசார பணிமனை
இவை மட்டும் இல்லை இன்னும் ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஓபிஎஸ் அணி அமைத்த பணிமனையில் ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகியோருக்கு இணையாகப் பிரதமர் மோடியின் ஆள் உயரப் படமும் இடம் பெற்றிருந்தது. அதேபோல பாஜக கொடிகளுக்கும் அங்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. எடப்பாடி தரப்பு வேட்பு மனுத் தாக்கலை ஒத்தி வைத்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் சத்தமில்லாமல் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டார்.
ஓபிஎஸ் நிலைப்பாடு
திமுகவும் சரி பாஜகவும் சரி அரசியல் அரங்கில் நேர் எதிர் நிலைப்பாட்டில் உள்ளது அனைவருக்கும் தெரியும்.. பாஜகவைக் கொள்கை அளவிலும் அரசியல் ரீதியாகவும் மிகக் கடுமையாக திமுக எதிர்த்து வருகிறது. அதேபோல தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை அனைத்து விவகாரங்களில் பாஜகவினர் தொடர்ச்சியாகச் சாடி வருகின்றனர். இப்படி இரு துருவங்களாக இருக்கும் இரு கட்சிகளுடன் மோதல் போக்கை வைத்துக் கொள்ளாமல் அரசியலில் புது ரூட்டில் செல்ல தொடங்கியுள்ளார் ஓபிஎஸ்!