ஸ்டெர்லைட் ஆலை திறப்பு.. கொள்கை முடிவுக்கு அவசியம் இல்லை.. அதிமுக
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காக கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே ஆலையை திறக்கக் கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துவிட்டது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி தெரிவித்தார்.
இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி கூறுகையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தீர்ப்பு வருத்தமான செய்தி. ஜெயலலிதா அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்க்கும் வல்லமை படைத்தது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தமிழக அரசின் செயல்பாடுகளால் கிடைத்த வெற்றி. தேசிய பசுமைத் தீர்ப்பாய தீர்ப்பு என்பது தூத்துக்குடி மக்களின் மனநிலைக்கு எதிரானது. தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்யும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்கள் பொறுமை காக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காததுதான் என்பது தவறான கருத்தாகும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டது.
கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசில் கூட எடுத்தது இல்லை. ஒரு தொழிற்சாலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுத்தால் அது மற்ற தொழிற்சாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால்தான் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியது. தமிழக மாசுக் கட்டுப்பாடு ஆணையமும் ஆலையை மூடுவதற்கான எல்லா நடவடிக்கையையும் எடுத்தது என்றார் ஜவஹர் அலி.