இடைத்தேர்தலில் எப்படி வெற்றிக்கனி பறிப்பது... தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஆலோசனை!
Recommended Video
சென்னை : 20 தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்த தடையில்லை என்றும் கூறியது. இதனையடுத்து இந்த 18 தொகுதிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மறைவால் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது
இந்நிலையில் கடந்த 29ம் தேதி அதிமுக சார்பில் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்பதை பேச்சளவில் சொல்லாமல் செயலிலும் இறங்கியுள்ளது அதிமுக. 20 தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலையில் ஆலோசனை நடத்தியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. டிடிவி தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ள நிலையில் இவர்கள் கொடுக்கும் நெருக்கடியை சமாளித்து அதிமுக எப்படி வெற்றியை தழுவுவது என்பதற்கான ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது : 20 தொகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தலை அறிவிக்கலாம். அத்தகைய நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டமானது இன்று நடைபெற்றது. இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றி பெறும், தொகுதியில் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார்.