கலக்கப்போவது முதல்வர்... கலங்கப்போவது கொரோனா... நமது அம்மா நாளிதழ் கட்டுரை
சென்னை: கலக்கப்போவது முதல்வர், கலங்கப்போவது கொரோனா என்ற தலைப்பில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாழிதழான நமது அம்மாவில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், கொரோனா விவகாரத்தில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் முதல்வர் தான் வெற்றிபெறுவார் என்றும், இது வேத சத்தியம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடவுளின் வடிவில் முதல்வரை தான் மக்கள் பார்க்கிறார்கள் எனவும் அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒப்புக் கொள்கிறேன்.. கோவாவில் சமூக பரவல் ஆரம்பம்.. முதல்வர் பிரமோத் சாவந்த்
நமது அம்மா
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து இன்று கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கொரோனாவை ஒழிக்காமல் விடப்போவதில்லை என்ற திட மனதுடன் மக்களின் ஒத்துழைப்புடன் முதலமைச்சர் இடைவிடாது போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் மக்களை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் புன்னகை
முதல்வரின் புன்னகை, தெளிவு, இடைவிடா முயற்சி, தைரியம், அனைத்து வல்லுனர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள், போன்றோரை உற்சாகப்படுத்தி சேவையில் ஈடுபடுத்தும் திறமை கொண்டவர் முதல்வர் என்றும், கடவுளின் வடிவில் முதல்வரை மக்கள் பார்க்கிறார்கள் எனவும் புகழாரம் சூட்டியுள்ளது. இரவு பகல் தூங்காமல் அதிகாரிகளுடன் முதல்வர் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுள் ஒருநாள்
புலம் பெயர்ந்தோருக்கு உணவு, உதவி, தர்ம சிந்தனைகள் மூலம் முதல்வரின் ஓய்வில்லாத போராட்டத்திற்கு கடவுள் நிச்சயம் ஒருநாள் கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்றுவார் என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. கலக்கப்போவது முதல்வரா? கதிகலங்கப்போவது கொரோனாவா? என்ற சந்தேகம் எழலாம், உங்களுக்கு சந்தேகமே வேண்டாம், நம் முதல்வர் தான் இதில் நிச்சயம் வெற்றி பெறுவார் என பெருமை பாடியுள்ளது இந்தக் கட்டுரை.
கட்சி நாளிதழ்
முதலமைச்சரை புகழ்வதாக எண்ணி நமது அம்மா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது. பொதுவாக அரசியல் கட்சிகள் நடத்தும் நாளிதழ்களில் கட்சித் தலைமையை பற்றி கட்டுரைகள் வெளியாவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்தக் கட்டுரையில், கடவுளின் வடிவில் முதல்வரை மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருப்பது சற்று ஓவர் டோஸாக உள்ளது.