எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்.. 2019ல் மெகா கூட்டணி.. அதிமுக பரபர வியூகம்
2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.
தற்போது அரசியலில் நிலவுவது ''கூட்டணி காலம்'' என்றுதான் கூற வேண்டும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய கூட்டணி அமைக்க உள்ளது.
காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட நிறைய கட்சிகள் இந்த தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிட போகிறது. இந்த தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக கருத்து தெரிவித்துள்ளது.
அதிமுக திட்டம்
கோவையில் பேட்டியளித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக சார்பில் மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும். எங்களுக்கு காங்கிரஸ் - திமுக கூட்டணி குறித்து பயம் இல்லை. தேர்தலுக்கு அஞ்சலி அவர்கள் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் அறிவித்தவுடன் மெகா கூட்டணியை உருவாக்குவோம்.
வியூகம்
இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருகிறார். அவர் இதற்காக வியூகம் வகுத்து வருகிறார். விரைவில் கூட்டணி குறித்து முடிவாகும். அதன்பின் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
நல்ல போட்டி
ஏற்கனவே தெலுங்கு தேசத்தின் முயற்சியில் உருவாக்கப்பட்டு வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பல எதிர்க்கட்சிகள் இடம்பிடித்து இருக்கிறது. 80 சதவிகித எதிர்க்கட்சிகள் இப்போதே அந்த கூட்டணியில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதனால் அதிமுக உருவாக்க போகும் மெகா பாராளுமன்ற கூட்டணியில் யார் இணைவார்கள், எந்த கட்சிகள் இடம்பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக கூட்டணி
முக்கியமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்று கேள்வி எழுந்து இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இப்போதே மிகவும் நெருக்கமான கட்சிகளாக இருக்கிறது. அதனால் தேர்தல் சமயத்தில் இந்த கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். அதிமுகவிற்கு கூட்டணி வைக்க மிக எளிமையான வாய்ப்பும் பாஜகதான், பாஜகவிற்கு தமிழகத்தில் காலூன்ற நல்ல வாய்ப்பு அதிமுகதான் என்றும் அரசியல் வல்லுநர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
பெரிய கேள்வி
ஆனால் பாஜக, அதிமுக தவிர்த்து இந்த கூட்டணியில் யார் வருவார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் 80 சதவிகித கட்சிகள் இப்போதே திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டது. தமிழகத்தின் இன்னொரு முக்கிய கட்சியான தேமுதிக ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்க போகிறது என்று கூறியுள்ளது. அதனால் அந்த கட்சி அதிமுக அமைக்க போகும் கூட்டணியில் சேருமா என்பது கேள்விதான்.
மற்ற கட்சிகள் என்ன
பாமக, சமக, புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மீதம் உள்ளது. இதில் கண்டிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகள் கண்டிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. இதனால் தமிழகத்தில் அதிமுகவின் கூட்டணியில் யார் இணைவார்கள் என்று பெரிய கேள்வி நிலவுகிறது.
தேசிய அளவில்
அதேபோல் தேசிய அளவில் இந்த கூட்டணியில் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும் மாநில கட்சிகள் அதிமுகவின் இந்த கூட்டணியில் சேருமா என்றும் விவாதம் எழுந்துள்ளது. மெகா கூட்டணியாக இந்த கூட்டணியை உருவாக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.
ரஜினி கமல்
அதேபோல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த பின் இந்த கூட்டணியில் சேர்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ரஜினி ஏற்கனவே அதிமுக, பாஜகவிற்கு ஆதரவாக பல இடங்களில் நிலைப்பாடு எடுத்துள்ளார். அதனால் அவர் இந்த கூட்டணிக்கு வருவாரா என்று விவாதம் உருவாகி உள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த கூட்டணி பக்கம் வருமா என்றும் கேள்விகள் எழுந்து இருக்கிறது.