#2021 CM FOR OPS அடுத்த முதல்வர் ஓபிஎஸ்... பெரியகுளத்தில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்ற போஸ்டர் போடியில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தினம் தினம் பரபரப்பாகவே இருக்கிறது அதிமுகவில். காரணம் எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வோம் என்று செல்லூர் ராஜூ கூறியதில் இருந்து அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்று போடியில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியது வரை தினம் தினம் பரபரப்புதான். #2021 CM FOR OPS என்ற ஹேஸ்டேக் போட்டு போடியில் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு முதல்வராக பதவியேற்றார் ஓபிஎஸ். இதனைத் தொடர்ந்து நடந்த பிரச்சினையில் ஓபிஎஸ் ராஜினாமா செய்யவே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தார் சசிகலா.
தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், எம்எல்ஏக்களை பிரித்தார். கட்சி உடையவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதில் வெற்றி பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. மீண்டும் இருவரும் இணைந்து துணை முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். இதுநாள் வரை குழப்பம் எதுவும் இன்றி நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. 2021 சட்டசபைத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
போஸ்டர் பரபரப்பு... கலக்கத்தில் அதிமுக... முதல்வர்... துணை முதல்வர் அவசர ஆலோசனை!!
அடுத்த முதல்வர் யார்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூ பேசிய போது எம்எல்ஏக்கள் கூடி தேர்வு செய்வோம் என்றார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் பல கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
உரிய நேரத்தில் அறிவிப்போம்
அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூடி பேசிய பின்னர் சட்டமன்ற தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கிவிட்டோம். முதல்வர் வேட்பாளர் என்பதையெல்லாம் கட்சி உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்று அறிவித்தார் கே.பி.முனுசாமி.
தாய் வழி தங்கங்கள்
இதே கேள்வியை ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்ட போது அதற்கு என்ன இப்போது அவசியம் என்று சொல்லி ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். "தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே" என்று ட்வீட் போட்டார் ஓ.பன்னீர் செல்வம்.
போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சொந்த தொகுதியான போடியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என்றும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ் என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
உடனே அப்புறப்படுத்தப்பட்டது
ஓபிஎஸ் வீட்டில் மூத்த அமைச்சர்கள் சென்று ஆலோசனை நடத்திய நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அவரது வீடு அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.