முதல்வர் வேட்பாளர் யார்?.. செயற்குழுவில் எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் வாக்குவாதம்?
சென்னை: வரும் 2021 ஆம் ஆண்டு அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் 5 மணி நேரம் விவாதம் நீடித்த நிலையில் எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்து பின்னர் ஓரணியானது. எனினும் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பினருக்கிடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பதிலால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நிரந்தர முதல்வர் என கூறியதால் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கட்சியில் இரு வேறு கருத்துகள் நிலவுவது தெரிய வந்தது.
அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு
பொதுச் செயலாளர்
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பின்னர் நீக்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி அந்த பதவி ஓ பன்னீர் செல்வத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கட்டும் என ஒரு சாரார் கருதுகிறார்கள். ஆனால் கட்சியும் ஆட்சியும் ஓபிஎஸ் தரப்பிடம் இருக்க வேண்டும் என ஒரு சாராரும், ஈபிஎஸ் தரப்பிடம் இருக்க வேண்டும் என மறுசாராரும் கருதுகிறார்கள்.
293 பேர்
இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் மொத்தம் 293 பேரில் சிலருக்கு கொரோனா தொற்றால் அவர்கள் தவிர மற்றவர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்தும் சுமார் 3 மணி நேரமாக விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என சிலர் வலியுறுத்துகிறார்களாம்.
பொதுச் செயலாளர் யார்?
அது போல் முதல்வர் வேட்பாளர் யார், பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என பெரும்பாலானோர் வலியுறுத்துகிறார்கள். அது போல் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 5 மணி நேரமாக நீடித்த செயற்குழு கூட்டம் முடிவடைந்தது.
ஈபிஎஸ்- ஓபிஎஸ் வாக்குவாதம்?
இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. துணை முதல்வராக இருக்க இந்த அதிமுக ஆட்சி காலத்திற்கு மட்டுமே ஒப்புக் கொண்டேன் என ஓபிஎஸ் கூறியதாக தெரிகிறது. நம் இருவரையும் முதல்வராக்கியது சசிகலாதான் என எடப்பாடி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. தன்னை முதல்வராக்கியது ஜெயலலிதா என்றும் உங்களை (ஈபிஎஸ்) முதல்வராக்கியது சசிகலா என்றும் ஓபிஎஸ் பதில் அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்துள்ளார்.