"சீக்ரெட்".. திமுகவை லெப்ட் அண்ட் ரைட் பிடித்த ராஜேந்திர பாலாஜி.. மீண்டும் வந்து சேர்ந்த மா.செ. பதவி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மா.செ. பொறுப்பு வழங்க என்ன காரணம்?
சென்னை: "எங்கே அரசு தப்பு செய்தது? எங்கே போலீஸ் காலதாமதம் செய்தது? முதல்வர் எங்கு முரண்பாடாக பேசினார்? நீதி எங்கே மறுக்கப்பட்டது? இது எல்லாத்தையும் சாத்தான்குளம் விவகாரத்தில், ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்" என்று ராஜேந்திர பாலாஜி சரமாரியாக கேட்ட கேள்விகளால், இப்போது அமைச்சருக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்து விட்டது.
அதாவது திமுகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறோமோ, அதுதான் கட்சி மீது செலுத்தப்படும் விசுவாசம் என்று அதிமுக தலைமை கருதுகிறது போலும்.. நடக்கிற ஒருசில விஷயங்களை பார்த்தால் நமக்கு அப்படித்தான் யூகிக்க தோன்றுகிறது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எது பேசினாலும் அது காட்டமாகவே இருக்கும்.. திமுகவுக்கு எதிரான அந்த வார்த்தைகளும், விமர்சனங்களும் தடிமனாகவே இருக்கும்.. மதரீதியாக மற்றொரு விமர்சனத்தை முன்வைக்கவும் கொந்தளித்த திமுக, ஆளுநரிடமே சென்று புகார் தந்தது.
அட கொடுமையே.. 5 மணி நேரமாக நடுரோட்டில் கிடந்த தாத்தாவின் சடலம்.. ஆம்புலன்ஸ் வர தாமதமா.. சென்னை ஷாக்!
கடிவாளம்
ஒரு கட்டத்தில் இது எல்லை மீறவும், இவர் அதிமுகவுக்கு ஆதரவாக பேசுகிறாரா? அல்லது பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறாரா என்று மண்டை காய வைத்துவிட்டார்... இறுதியில் எடப்பாடியார் இவருக்கு ஒரு கடிவாளத்தை போட்டார்.. நாவடக்கத்துடன் பொறுமையாக பேச சொன்னார்.. அப்போதும் இவர் தனது போக்கை மாற்றி கொள்ளாததால், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கொரோனா நிவாரணம்
பொதுவாக, ஒருவரை ஸ்ட்ராங் பதவியில் இருந்து தூக்கிவிட்டால் அதோடு அவர்கள் மவுனத்தின் போக்குக்கு போய்விடுவார்கள்.. ஆனால் ராஜேந்திர பாலாஜி வித்தியாசமானவர்.. சில நாட்கள் அமைதியாக இருந்தவர், திடீரென கொஞ்சம் விவரமாகவும் செயல்பட துவங்கினார். கொரோனா நிவாரண பணியை கையில் எடுத்தார்.. அமைச்சராக மாவட்டம் முழுவதும் வலம் வந்ததுடன், அரசு திட்டங்களை நிறைவேற்றும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
பிரசாந்த் கிஷோர்
அப்போதும் அந்த நிவாரண பொருட்களை அமைதியாக கொடுத்தாரா என்றால் இல்லை, "ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்பதை ஸ்டாலின் மறந்துவிடக்கூடாது. கலைஞர் இருக்கும்வரை திமுக சுயமரியாதையுடன் இருந்தது... ஆனால் இப்போது பிரசாந்த் கிஷோர் கூறும் ஆலோசனையைக் கேட்டு, கட்சியை நடத்த வேண்டிய அவல நிலையில் திமுக உள்ளது... திமுக இனி கதம் கதம்தான்... திமுக என்ற கட்சியே வரும் தேர்தலோடு முடியப்போகிறது.. இனி எந்தத் தேர்தலிலும் திமுகவிற்கு வேலையே இருக்காது.. 2-ம் கட்ட தலைவர்கள் எல்லாம் ஸ்டாலினின் போக்கு கண்டு மனம் வெதும்பி போய் இருக்கிறார்கள்" என்று திமுகவை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.
விமர்சனம்
இவ்வளவு நாள் அமைதியாக இருந்த அமைச்சர் திடீரென ஏன் திமுக மீது பாய்கிறார்? ஏற்கனவே இவரை கவனத்துடனும், நிதானத்துடனும் பேச சொல்லி முதல்வர் அறிவுறுத்தி இருந்த நிலையில், இன்றைய சூழலில் அமைச்சர் ஏன் கடுமையாக விமர்சிக்கிறார்? ஒருவேளை எடப்பாடியாருக்கு தெரிந்தே இப்படி பேசுகிறாரோ என்றெல்லாம் சந்தேகம் வலுத்தது.
பதிலடிகள்
ஆனால், கொரோனாவை சாதகமாக்கி திமுக அரசியல் செய்துவருகிறது என்று அதிமுக தரப்பு புலம்பிய நிலையில், திமுகவுக்கு சரியான பதிலடிகளை இந்த நேரத்தில் தருவதற்கு ராஜேந்திரபாலாஜியே சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.. வேறு அமைச்சர்கள் இந்த அளவுக்கு திமுகவை படுமோசமாக விமர்சித்து பேட்டி தருவதில்லை.. சவால் விட்டதில்லை.. அந்த தில் ராஜேந்திர பாலாஜிக்கு இருப்பதாகவே எடப்பாடியார் கருதுகிறார் போலும்.. இப்போது பறிக்கப்பட்ட அதே மா.செ. பொறுப்பு திரும்பவும் தரப்பட்டுள்ளது.
எங்கே தவறிழைத்தது?
இந்நிலையில்தான், கொரோனாவை கிண்டி எடுத்த ஸ்டாலின், சாத்தான்குளத்தையும் கிண்டி வருவதால், அதற்கும் ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.. "சாத்தான்குளம் விவகாரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார்... இதில், எங்கே அரசு தவறிழைத்தது? எங்கே காவல்துறை காலதாமதம் செய்தது? முதல்வர் எங்கு முரண்பாடாக பேசினார்? நீதி எங்கே மறுக்கப்பட்டது? என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்" என்று கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி உள்ளார்.
மீண்டும் பொறுப்பு
ஒரு பக்கம் எதிர்க்கட்சியை நறுக்கென இப்படி கேள்விகளை கேட்பது போலவும் இருக்கணும், இன்னொரு பக்கம் ஆளும் தரப்பை விட்டுத்தராமல் புகழ்வது போலவும் இருக்கணும்.. இதுதான் ராஜேந்திரபாலாஜிக்கு மீண்டும் பொறுப்பை தருவதற்கு காரணமாக இருக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. எது எப்படியோ இனி தென் மாவட்டங்களில் மறுபடியும் தீ பறக்கும்.