பாமக முன்னெடுக்கும் இட ஒதுக்கீடு போராட்டம்.. தைலாபுரம் தோட்டத்திற்கு தூது மேல் தூது விடும் அதிமுக..!
சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் இணைய வழி சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளன.
தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது பாமக.
அதிமுக அரசுக்கு தர்மசங்கடம் கொடுக்கும் வகையில் பாமக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தைலாபுரம் தோட்டத்திற்கு அக்கட்சியில் இருந்து தூது அனுப்பும் படலம் தொடங்கியிருக்கிறது.
திமுக தீர்மானம் இருக்கட்டும்... 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம் - ஜெயக்குமார்
அதிமுக-பாமக கூட்டணி
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து கூட்டணிக் கட்சிகளில் முதல் மரியாதை அளித்தது அதிமுக. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 2019 மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் நடைபெற்ற 21 தொகுதி இடைதேர்தலில் பாமகவின் ஆதரவு அதிமுகவுக்கு தேவைப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் பாமகவின் தயவால் அதிமுக வெற்றிக் கொடி நாட்டியது.
பாமக முன் வைத்த கோரிக்கை
கடந்தகால தேர்தல்களில் பாமக மூலம் அதிமுக ஆதாயம் அடைந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பாமக டிமாண்ட் வைத்து வருகிறது. மேலும், அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதிலும் பாமக உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கைகள் மீது இருந்து உரிய பதில் கிடைக்காத அதிருப்தியில் இருந்த ராமதாஸ் அதிமுக அரசுக்கு எதிராக சீறத் தொடங்கியுள்ளார்.
8 வழிச்சாலை திட்டம்
கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்த ராமதாஸ், அடுத்தடுத்து 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அதிமுக அரசுக்கு நெருக்கடி தரக்கூடிய தீர்மானங்களை பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றியிருக்கிறார். பாமக பாதை மாறுகிறதோ என அஞ்சிய அதிமுக மேலிடம் இப்போது தைலாபுரம் தோட்டத்திற்கு தூது விடத் தொடங்கியுள்ளது.
பதில் இல்லை
இதனிடையே அதிமுக விடும் தூதிற்கு ராமதாஸ் இன்னும் பிடிகொடுக்காதவராகவே இருக்கிறார். இருப்பினும் அதிமுக தனது முயற்சியை கைவிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தான் அண்மையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூட, டாக்டர் ஐயா என ராமதாஸை புகழாரம் சூட்டும் வகையில் பேசியிருந்தார் கே.பி.முனுசாமி.