சி.பி.ராதாகிருஷ்ணன் பூச்சாண்டி காட்டுகிறாரா...? பேட்டியை குறிப்பிட்டு கொதித்த அதிமுக சீனியர்கள்
சென்னை: அதிமுக மிகப்பெரிய தோல்வியை தழுவும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டியளித்தது கூட்டணி விவகாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன் அதிமுகவுக்கு பூச்சாண்டி காட்டுகிறாரா என அக்கட்சியின் அதிமுக்கிய நிர்வாகிகள் சிலர் கொந்தளித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான புகாரை பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் கவனத்திற்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநிலத்தை சூறையாடிய மழை வெள்ளம் - சொந்த ஊரில் அகதிகளாக தவிக்கும் மக்கள்
சட்டமன்றத் தேர்தல்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி இரு கட்சிகளின் மூத்த தலைவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தோல்வியை தழுவும் என்றும் கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய உள்துறை வரை இதனை கொண்டு செல்வோம் எனவும் சி.பி.ஆர். தெரிவித்திருந்தார்.
முக்கிய நிர்வாகிகள்
கந்த சஷ்டி விவகாரத்தில் கைது நடவடிக்கை, கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் முடக்கம், கோவையில் கோயில் முன்பு டயர்களை எரித்த நபர் கைது, என பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறார் அதிமுக தலைமையிடம் அக்கட்சியின் அதிமுக்கிய முன்னணி நிர்வாகிகள் சிலர் தங்கள் உள்ளக்குமுறலை கொட்டியுள்ளனர். மேலும் பொறுப்புள்ள ஒரு நபர் பொதுவெளியில் பேட்டி என்ற பெயரில் இப்படித்தான் கொச்சைப்படுத்துவதா என கொந்தளித்துள்ளனர்.
அதிமுக புகார்
தேர்தல் நெருங்கும் சூழலில் சி.பி.ராதாகிருஷ்ணன் இப்படி பேசுவது கூட்டணிக்கு பொருத்தமற்ற செயல் என்றும் தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் நல்லதாக தெரியவில்லை எனவும் அதிமுக தரப்பில் இருந்து தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவிற்கு புகாராக அனுப்ப முயற்சி நடைபெறுகிறது. இதனிடையே அண்ணாவை பற்றிய ஹெச்.ராஜாவின் பதிவு விவகாரத்திலும் கே.பி.முனுசாமி, தம்பிதுரை போன்றோர் கடுமையாக கோபம் கொண்டதாக கூறப்படுகிறது.
சி.பி.ஆர்.புகழாரம்
இதனிடையே கடந்த ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல மணவிழாவில் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மு.க.ஸ்டாலினை வெற்றித்தளபதி எனக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.