23 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? அடுத்தகட்ட பரபரப்பில் தமிழகம்
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபாலிடம் அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.
முதல்வருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அவர்களின் தகுதி நீக்கத்தை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதனால் 18 பேரும் பதவிகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில் 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
முதல்வரை விமர்சித்து பேசிய கருணாஸை ரத்தினசபாபதி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். குற்றாலத்தில் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களும் தங்க வைக்கப்பட்ட போது இவர்கள் 3 பேரும் சென்றிருந்தனர். இந்நிலையில் இந்த 3 பேரிடமும் விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
[20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?- 18 பேரும் மீண்டும் போட்டியிடலாமா? தேர்தல் ஆணையர் பரபர தகவல்]
அதற்கு உரிய பதிலை அளிக்காவிட்டால் 18 பேருக்கு நேர்ந்ததுதான் இவர்களுக்கும் என்று கூறப்படுகிறது. எனவே என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் 3 பேரும் குழப்பத்தில் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவாக உள்ள கருணாஸிடமும் விளக்கம் கேட்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
இதனிடையே டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு கொறடா கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை அவர்கள் 18 பேரையும் போல் விளக்கம் அளிக்கத் தவறினால் அவர்களது பதவியும் பறிக்கப்பட்டு 23 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.