Exclusive: 2021 பிப்ரவரி 24-ம் தேதி ''அம்மா'' நினைவிடம் திறப்பு... வைகைச்செல்வன் புதிய தகவல்..!
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடம் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி திறக்கப்படும் என அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தமிழக மக்கள் மத்தியில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுகின்றன, இதற்கு உங்கள் பதில்?
பதில்: ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது காங்கிரசுடன் கூட்டணி வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் திமுக பலவீனமடைந்து விட்டது என்று எடுத்துக்கொள்ள முடியுமா. அதேபோல் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுகவுக்கான பலமும் செல்வாக்கும் அப்படியே தான் இருக்கும். பாஜகவை பிடிக்காதவர்கள் கூட்டணியை பற்றி விமர்சிக்கத் தான் செய்வார்கள். அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். அதாவது இந்தக் கூட்டணி இப்போது உருவாகவில்லை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே அமைக்கப்பட்ட கூட்டணி. அந்தக் கூட்டணி இப்போது தொடரும் என எங்கள் கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.
கேள்வி: வரும் சட்டமன்றத் தேர்தலில் எதை கூறி மக்களிடம் அதிமுக வாக்கு கேட்கும்?
பதில்: பத்தாண்டு காலம் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறோம். ஆட்சியில் செய்த மக்கள் நலத் திட்டங்கள், அரசின் சாதனைகள், எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் பெருமைகளை பேசி வாக்கு கேட்போம். விளிம்புநிலை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் அண்ணா திமுக இதுவரை 7 முறை தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கிறது. இதனால் வரும் தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையும் நாங்கள் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. திமுகவின் பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் களத்தில் மேற்கொள்ளும் பரப்புரையின் போது தக்க பதிலடி கொடுப்போம்.
கேள்வி: அதிமுகவின் பிரச்சாரப் பயணம் எப்போது தொடங்கப்படும்..?
பதில்: மிக விரைவில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும். கொரோனா கால விதிமுறைகளில் மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு அண்ணா திமுகவின் பிரச்சாரம் சூடி பிடிக்கும்.
கேள்வி: சசிகலாவின் விடுதலையை மையமாக வைத்து அரசியல் நிலவரம் மாறுமா?
பதில்: சசிகலாவின் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஏற்கனவே முதலமைச்சர் கூறியிருக்கிறார். அதை தான் நானும் கூறுகிறேன். சசிகலா இல்லாமலும் இயங்க முடியும் என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. சசிகலா இல்லாமலேயே கடந்த 4 ஆண்டுகாலம் கட்சியும் ஆட்சியும் செயல்பட்டுவிட்டது. இதனால் சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கேள்வி: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்பெஷல் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாமா?
பதில்: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்னும் 10 நாட்களில் கூட இருக்கிறது. மக்கள் நலன் குறித்த திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு அறிக்கையில் சேர்க்கப்படும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் நிச்சயம் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கேள்வி: ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளில் சுணக்கம் உள்ளது போல் தெரிகிறதே..?
பதில்: ஒரு சுணக்கமும் இல்லை, பணிகள் நிறைவு நிலையை அடைந்துவிட்டன. 2021 பிப்ரவரி 24-ம் தேதி அம்மாவின் பிறந்தநாளன்று அவரது நினைவிடம் திறப்பு விழா காண உள்ளது.