நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. அதிமுக விருப்பமனு விநியோகம் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் காலியாகியுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது.
நாங்குநேரி சட்டசபை தொகுதியின் உறுப்பினராக இருந்த எச் வசந்தகுமார் தற்போது கன்னியாகுமரி லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டதால் அவர் அத்தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த ராதாமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் அமமுக, மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது. நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு தெரியவில்லை. இதனால் தற்போதைய நிலையில் அதிமுக- திமுகவுக்கு மட்டுமே போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. இதில் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் போட்டியிட முன்னாள் மனோஜ்பாண்டியன், நாஞ்சில் பி.சி. அன்பழகன், கே ஆர் பிரபாகரன், விஜயகுமார் உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அது போல் விக்கிரவாண்டி தொகுதியில் முன்னாள் எம்பி ஆர் லட்சுமணன், ஆர் வேலு, முத்தமிழ்ச் செல்வன் , கே பன்னீர் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.